ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கம் : பெட்ரோல் விலை மேலும் சரியும்

 

Unknown
ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக ஈரான்மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான்மீது பொருளாதார மற்றும் வர்த்தக தடையை விதித்தன. அந்த தடையை நீக்க வேண்டுமானால் சர்வதேச அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கண்டுள்ள நிபந்தனைகளை ஈரான் பின்பற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

தன்வசமுள்ள அணு ஆயுதங்களையும், அணு தயாரிப்பு திட்டங்களையும் அழிக்க முதலில் மறுத்த ஈரான், பின்னர் சர்வதேச நெருக்கடிக்கு பணிந்தது. இதையடுத்து, அணு செறிவூட்டல் மற்றும் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திக்கொள்வதாக ஈரான் அறிவித்தது. 

இதையடுத்து, சர்வதேச அணு ஆயுத தடை முகைமையை சேர்ந்த அதிகாரிகள் சுமார் ஓராண்டு காலம் ஈரானில் முகாமிட்டு அங்குள்ள அணு உற்பத்தி தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தினார்கள். மின் உற்பத்தி உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகளுக்காக செயல்பட்டுவரும் திட்டங்களை தவிர பிற அணு ஆயுத தொழிற்சாலைகள் மூடப்பட்டன. 

இதையடுத்து, சர்வதேச அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈரான் கையொப்பமிட்டது. அதில் உள்ள நிபந்தனைகளை எல்லாம் எதிர்காலத்தில் முழுமையாக பின்பற்றுவதாகவும் உறுதியளித்தது. இந்நிலையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடையை முழுமையாக நீக்கியுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இன்று அறிவித்துள்ளன. 

இதேபோல், கடந்த ஆண்டு ஜூலை மாதம் செய்துகொண்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் நிறைவேற்றியுள்ளதால் அந்நாட்டின் மீதான வர்த்தகம் மற்றும் பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் விலக்கிக் கொள்கிறது என ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு கொள்கைகளுக்கான தலைவர் பெடிரிகா மோகெர்னி குறிப்பிட்டுள்ளார். 

எண்ணை வளத்தில் குறிப்பிடத்தக்க நாடாக திகழும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் நீக்கியுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் ஏற்கனவே வரலாறு காணாத வீழ்ச்சியடைந்து பேரல் ஒன்று 30 டாலர்களுக்கு விற்கப்படும் பெட்ரோல் விலை மேலும் சரியும் என கருதப்படுகிறது. 

இதற்கிடையில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் புதிய உறவு பூத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருநாடுகளும் தங்களிடம் பிடிபட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை பரஸ்பரம் விடுவிப்பதாக அறிவித்துள்ளன. 

வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் நிருபர் உள்பட நான்குபேரை விடுதலை செய்ய ஈரான் முன்வந்துள்ளது. இதேபோல், ஏழுபேருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவும் 14 ஈரானியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.