சுற்றுலா கப்பல் சேவையொன்றை ஆரம்பிக்க இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் நடவடிக்கை !

 

 

சுற்றுலா கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பது குறித்து இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளது.

Unknown

கொழும்பு, காலி மற்றும் திருகோணமலை பிரதேசங்களை மையமாகக்கொண்டு சுற்றுலா கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சஷி தனதுங்க குறிப்பிட்டார்.

குறிப்பாக, கொழும்பு நகரை பிரதான மையமாகக் கருதி இந்த சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காலி மாவட்டத்திற்கும் அதற்கேற்ற கேந்திர முக்கியத்துவத்தை வழங்குவதுடன், திருகோணமலை துறைமுகத்தையும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதுதவிர, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் அதற்கேற்ற சுற்றுச் சூழல் உருவாகும்போது, யால சரணாலயத்தை மையமாகக்கொண்டு அங்கும் சுற்றுலா கப்பல் சேவையை விஸ்தரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.