(வீடியோ) உளவாளிகள் 5 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் – இங்கிலாந்துக்கு மிரட்டல் !

 

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர். தங்களிடம் பிடிபடும் பிணைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்து வீடியோ மூலம் அச்சுறுத்தி வருகின்றனர்.

சிறிது காலமாக கொலை வீடியோ வெளியிடாமல் இருந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் சமீபத்தில் மீண்டும் ஒரு வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். அதில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் சர்வதேச படைகளுக்கு உதவும் 5 உளவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் ரக்காவில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. இந்த வீடியோவில் இங்கிலாந்தில் ஒரு ஐ.எஸ்.தீவிரவாதி பேசி இருக்கிறான். அதில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இங்கிலாந்துக்கு கடும் எச்சரிக்கையும், மிரட்டலும் விடுத்தான்.

மேலும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை, மனதைரியம் இல்லாத பைத்தியக்காரர் என தெரிவித்து இருக்கிறான்.

கொல்லப்பட்ட 5 உளவாளிகளும் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். ரமாடி நகரை ஈராக் ராணுவம் கைப்பற்றிய பிறகு ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தற்போது அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் இங்கிலாந்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.