“சம கால அரசியல்” தொடர்பாக பஷீர் சேகுதாவூத் அவர்களின் உரை !

பெரும்பான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெரிய கட்சிகள் ஒன்றுபடுகின்ற போது சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறுபான்மை இனங்களின் கட்சிகள் பிளவுபடுவது ஆபத்தானது என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலமுகா வின்  தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

முன்னாள் செனட்டர் மசூர் மௌலானாவின் நினைவுகூரல் நிகழ்வில் “சம கால அரசியல்” எனும் தலைப்பில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

 

ஏறாவூர் அஷ்ரப் நற்பணி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஸ்ரீலமுகா கட்சியின் ஏறாவூர்க் கிளைக் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல். முஹைதீன்பாவா தலைமையில் ஏறாவூர் வாவிக்கரையோரப் பூங்காவில் நேற்று  இரவு இடம்பெற்றது.

 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பஷீர் சேகுதாவூத் மேலும் கூறியதாவது,

 

“செனட்டர் மசூர் மௌலானா மருதமுனை மண்ணுக்கு மட்டும் உரித்தான சொத்தல்ல. அவர் முழு இலங்கை முஸ்லிம் தேசியத்திற்கும் சொந்தமான ஒரு முதுசமாகும். அதனால் தான் மருதமுனையையும் கொழும்பையும் கடந்து எமது ஏரவூரிலும் அவரை நினைந்து பேசுவதற்கு நாம் விரும்பினோம்.
 1977 ஆம் ஆண்டில் எமது மண்ணில் பரீத் மீராலெப்பை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் முடக்கப்பட்டிருந்தார். அப்போது மசூர் மௌலானா மிகவும் துணிச்சலுடன் ஏறாவூரில் களமிறங்கி, பிரசாரத்தில் ஈடுபட்டு பரீத் மீராலெப்பையின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
அவர் தமிழ்- முஸ்லிம் ஐக்கியத்தின் அடிநாதமாகத் திகழ்ந்த ஓர் அரசியல் தலைவர். இந்த சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தமிழ் தேசியத் தலைமைகளுடன் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்து, அதற்காக இரத்தம் சிந்தி சிறைவாசமும் அனுபவித்திருந்தார்.
செனட்டர் மசூர் மௌலானாவுக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. தமிழ் தேசியத்திற்காக அவர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அதே விடயத்திற்காக நான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். அவரும் நானும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் ஒரே நாளில் சேர்ந்து, ஒரே பதவியை வகித்திருந்தோம்.
நான் 1994ஆம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முதன்முறையாகப் போட்டியிட்டபோது தேர்தல் பிரச்சாரப் பணிகளில் நான் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தேன். அப்போது மசூர் மௌலானா இங்கு வந்து எனக்காகப் பிரசாரம் செய்தார்.
அதனால் அவருக்கும் எனக்கும் நெருக்கமான உறவு இருந்து வந்தது. அவர் பற்றி என்னால் நிறையப் பேச முடியும். ஆனால் இன்று நான் ஒரு முக்கிய ரகசியத்தை வெளியிடப் போகின்றேன். அந்த ரகசியம் என்னையும் மசூர் மௌலானாவையும் தவிர வேறு எவருக்கும் இதுவரை தெரிந்திராத இரகசியமாகும்.
அதாவது 2002 ஆம் ஆண்டு அரசு- புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒஸ்லோவுக்கு சென்றிருந்தவேளை எமது கட்சியின் தவிசாளராகவிருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரவூப் ஹக்கீமை அகற்றுவதற்கு சதிப் புரட்சி ஒன்றை அரங்கேற்ற முற்பட்டார்.
பேரியல் அஷ்ரப் தலைமையில் கட்சி பிளவுபட்ட போதோ, ரிசாத் பதியுதீன் தலைமையில் பிளவு ஏற்பட்ட போதோ அல்லது வேறு சில சந்தர்ப்பங்களில் உருவான நெருக்கடிகளின் போதோ இல்லாதளவுக்கு பாரதூரமான ஒரு விடயமாக அதாவுல்லாவின் திட்டம் அமைந்திருந்தது.
அதற்கான அத்தனை வேலைகளையும் கனகச்சிதமாக அதாவுல்லா மேற்கொண்டிருந்தார். அப்போதைய செயலாளர் டாக்டர் ஹப்ரத்தைக் கொண்டு கட்சியின் அதியுயர் பீடத்தைக் கூட்டுவதற்கான அழைப்பை உத்தியோகபூர்வமாக விடுத்திருந்தார். அதியுயர் பீட உறுப்பினர்களுள் பெரும்பாலானோர் அதாவுல்லாவின் பக்கம் சாய்ந்திருந்தனர். அவரிடம் சட்டப்படி கூட்டம் நடத்துவதற்கான கோரம் இருந்தது. அன்றிரவு அதாவுல்லா திட்டமிட்டிருந்தபடி கூட்டம் நடந்திருந்தால் கட்சி யாப்பின் பிரகாரம் ரவூப் ஹக்கீமின் தலைமைப் பதவி நிச்சயம் பறிபோயிருக்கும்.
ஆனால் அந்த சதியை முறியடிப்பதற்கு காரணமாக இருந்தவர் செனட்டர் மசூர் மௌலானா எனும் ரகசியத்தை நான் இன்று அம்பலப்படுத்துகின்றேன். அன்று அதிகாலை என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் இந்த சதித் திட்டம் பற்றி எனக்கு விபரித்தார். அவர் சொன்ன தகவல் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
உடனே நான் ராணுவப் பாணியில் களமிறங்கினேன். எனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு இரண்டு இளம் எம்.பி.க்களை என்னுடன் சேர்த்துக் கொண்டேன். புத்தளம் கே.ஏ.பாயிஸுடன் தொடர்பு கொண்டேன். கூட்டம் நடைபெறவுள்ள தாருஸ்ஸலாமுக்கு நூறு பேரை திரட்டிக் கொண்டு வருமாறு அவரிடம் கூறினேன். அவர் பஸ்களில் ஆட்களை கொண்டு வந்து இறக்கினார்.
அன்று இரவு கூட்டம் நடத்துவதற்காக அதாவுல்லாவும் அவருக்கு ஆதரவான அதியுயர் பீட உறுப்பினர்களும் வந்திறங்கிய போது அவர்கள் மீது கல்லெறி பொழியப்பட்டது. அதாவுல்லாஹ் நிலைகுலைந்து ஓட்டமெடுத்தார். பின்னர் நாமே அந்தக் கூட்டத்தை நடத்தி முடித்தோம்.
இப்படியொரு சதி நடக்கிறது என்று மசூர் மௌலானா எனக்கு தெரியப்படுத்தியிருக்கா விட்டால் எம்மால் இந்த சதியை முறியடித்திருக்க முடியாது. ரவூப் ஹக்கீமின் தலைமைப் பதவியை காப்பாற்றியிருக்கவும் முடியாது. செனட்டர் மசூர் மௌலானாவின் இதயத்தில் ரவூப் ஹக்கீம் இருந்தார். அதனால் ரவூப் ஹக்கீம் மு.கா.வின் தலைவராக நீடிக்கிறார்” என்று பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டார்.

முக்கியமான அரசியல் யாப்புத் திருத்தத்தினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற தற்போதைய சூழ்நிலையிலே சிறுபான்மைச் சமூகக் கட்சிகளுக்குள்ளும் சிறுபான்மை இனங்களுக்குள்ளும் பிளவுகள் ஏற்படுவது மிகவும் ஆபத்தானது.

 

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றபோது இப்பொழுது புதிதாக தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பு உருவாகியிருக்கின்றது.

 

பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளின் ஒப்பந்தத்திலே புதிய அரசியல் யாப்புத் திருத்தம் நிறைவேறிவிடும் என்கின்ற ஆபத்து இருக்கத்தக்கதாக ஒட்டுமொத்தமாக சிறுபான்மைத் தமிழினத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சி பிளவுபட்டுப் பிரிந்து நின்று ஏகோபித்த தமிழர் ஆதரவு என்கின்ற அந்த நிலைப்பாட்டிலும் மாற்றம் வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதது மாத்திரமல்ல பேராபத்து நிறைந்ததுமாகும்.

சில அரசியல் தலைவர்களுடைய தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று புத்திஜீவிகளும் சிவில் சமூகமும் விரும்பினால் அந்தத் தலைவர்களோடு பேசி உடன்பாட்டைக் கொண்டு வந்து இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்திலே ஒரு ஏகோபித்த முடிவுக்கு வரவேண்டுமே தவிர வெண்ணை திரண்டு வருகின்றபோது தாழியை உடைக்கின்ற நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொதி, தமிழ் மக்கள் பேரவை ஒரு பொதி என்று மேசைக்குக் கொண்டு வந்தால் அது இதுவரை நாம் கண்டிராத ஆபத்தைக் சிறுபான்மை இனங்களுக்குக் கொண்டு வருவதோடு எதுவுமே கிடைக்காத ஒரு கையறு நிலைக்கும் இட்டுச் செல்லும்.

அத்துடன் அந்த பிளவுபட்ட நிலைப்பாடு அடுத்த சிறுபான்மை இனமான முஸ்லிம்களையும் அதிகளவில் பாதிக்கும்.

புதிய அரசியல் யாப்புக்கு முன்பாக முதலில் சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சமூகத்திற்குள்ளும் பின்னர் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலும் புரிந்துணர்வோடு பேசி அசைக்க முடியாத உடன்பாட்டை எட்டிக் கொண்டு அதனை சிங்களத் தேசியத்திடம் முன்வைக்க வேண்டும்.

தமிழ் முஸ்லிம் மக்கள் உடன்பட்டுத் தயாரிக்கும் புரிந்துணர்வுப் பொதியே இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களை வாழ வைக்கும்.

செயிட் ஆஷிப்