நல்லாட்சியில் முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொண்ட அனுகூலங்கள் என்ன ? : தவம் !

 எம்.ஐ.எம்.றியாஸ்

ஒரு வார காலத்திற்கு நாட்டில் நல்லாட்சியைக் கொண்டாடுமாறு பணிக்கப்பட்டுள்ளோம். நாமும் கொண்டாட முயற்சிப்போம்.ஆனால், இந்நல்லாட்சியில் தமிழ் சமூகமும், மலையக சமூகமும் பெற்றுக் கொண்டுள்ள அனுகூலங்களை விட முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொண்ட அனுகூலங்கள் குறைவானது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும் என கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

இறக்காமம் வாங்காம் பிரதேச விவசாயிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

thavam

வடக்குக் கிழக்கில் தமிழ் சமூகத்தின் இயல்பு வாழ்விற்குத் தடையாக இருந்த இராணுவக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன.யுத்த காலத்தில் பல்வேறு வழிகளில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்படிப்படியாகவிடுவிக்கப்பட்டு வருகின்றன. புலம்பெயர்தமிழர்களை முன்னிலைப்படுத்தி வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின்தேசியப் பிரச்சினைக்கு அதிகாரப்பூர்வ தீர்வு வழங்கும் பொருட்டு யாப்பு மாற்றம் கொண்டுவரும்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோன்று, மலையக சமூகத்திற்கான வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த பாரிய அனுகூலங்கள் என்று குறிப்பிட்டுக் கூறுமளவு எதுவும் இல்லை. கிழக்கில் மாத்திரம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 20,000 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களால் கையக்கப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இன்னும் ஒரு இஞ்சி நிலம் கூட விடுவிக்கப்படவில்லை.

ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்கள் வசித்து வந்த பூர்வீகக் காணிகள், யுத்தத்தினால் அவர்கள் குடிபெயர்ந்த பின்னர் காடுகளாக மாறியிருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்து குடியேறுவதிலிருந்தும் தடுக்கப்படுகின்றனர். மட்டக்களப்பில் மாத்திரம் சுமார் பதினைந்து கிராமங்கள் இவ்வாறு இருக்கின்றன. முஸ்லிம்களின்பாரம்பரிய விவசாயக் காணிகளில் விவசாயம் செய்வதற்கு முடியாமல் நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே தடுக்கப்படுகின்றனர். பொத்துவில் பிரதேச முஸ்லிம் விவசாயிகளுக்குச் சொந்தமான லாஹுகல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரத்தல் கண்ட பள்ளியடி வட்டையில் அமைந்துள்ள சுமார் 127 ஏக்கர் விவசாயக் காணிகளில்கடந்த பெரும் போக விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்ட போதிலும், இந்தப் பெரும் போகத்தில் விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, பொத்துவில்விவசாயிகளுக்குச் சொந்தமான கிராங்கோமாரி விவசாயக் காணிகளின் பிரச்சினை, அக்கரைப்பற்று விவசாயிகளுக்குச் சொந்தமான வட்டமடு விவசாயக் காணிகளின் பிரச்சினை,அட்டாளைச்சேனை அஷ்ரப் நகர் விவசாயக் காணிகள் பிரச்சினை, சம்மாந்துறை கரங்கா வட்டை விவசாயக் காணிகள் பிரச்சினை, புல்மோட்டை அரிசிமலை நிலப்பிரச்சினை, தோப்பூர் குடியேற்ற நிலப்பிரச்சினை என எந்தப்பிரச்சினைக்கும் முஸ்லிம்களுக்கு இது வரை எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை.

எனவே,இந்நல்லாட்சியில் தமிழ் சமூகமும், மலையக சமூகமும் பெற்றுக் கொண்டுள்ள அனுகூலங்களை விட ஒப்பீட்டு ரீதியில் முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொண்ட அனுகூலங்கள் என்ன என்பதை கனத்த இதயத்தோடு நான் கேள்வியாகக்கேட்க விரும்புகிறேன் எனவும் அவர் மேலும் இங்கு தெரிவித்தார்.