திருத்தங்களை செய்வதால் 7 ஆயிரம் மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படும் : ரவி !

வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரசுக்கு கிடைக்கவுள்ள வருமானத்தில் 7 ஆயிரம் மில்லியன் ரூபாவரை இழப்பு ஏற்படும்…

ravi-karunanayake

என்றும், அதை எவ்வாறு ஈடுசெய்வது என்பது தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல் ஆகியன முடிவடைந்தப் பின்னர், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது.

இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட எம்.பியான பந்துல குணவர்தன, நிதி அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார். அவற்றுக்கு நிதி அமைச்சர் பதில்களை வழங்கினார். 

இதையடுத்து இடையீட்டுக்கேள்வியொன்றை எழுப்பிய பந்துல குணவர்தன எம்.பி.,

“வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடடிவக்கை இடம்பெறுகிறது. எவ்வாறான திருத்தங்கள் என்ற அறிவிப்பை பிரதமர் விடுத்துள்ளார்.

திருத்தங்களை முன்வைப்பதால் வரவு – செலவுத் திட்டத்தில் வருமானம், செலவீனங்களில் மாற்றம் ஏற்படும். துண்டுவிழும் தொகையிலும் மாற்றம் ஏற்படும்.

எனவே, எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பில் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் இந்தச் சபைக்கு நிதி அமைச்சர் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா?” – என்று கேட்டார். 

இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சர்,

“குழுநிலை விவாதத்தின்போது பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்படும். அந்தவகையில் சகல எம்.பிக்களுடனும் கலந்துரையாடிய பின்னர், பிரதமர் திருத்தங்களை முன்வைத்துள்ளார். இது கல்லால் செதுக்கப்பட்ட பட்ஜட் அல்ல. எனவே, நாட்டுக்கு நன்மைப்பயக்கக்கூடிய திருத்தங்களை நீங்களும் முன்வைக்கலாம். அவை உள்வாங்கப்படும். ஜனாதிபதியும் யோசனைகளை முன்வைத்துள்ளார்.

திருத்தங்களை செய்வதால் 7 ஆயிரம் மில்லியன் ரூபாவரையே வருமான இழப்பு ஏற்படும். அது எவ்வாறு ஈடுசெய்யப்படும் என்பது பற்றி 19 ஆம் திகதி அறிவிக்கப்படும். அபிவிருத்தி, நிவாரணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மாற்றங்கள் செய்யப்படாது” என்றார்.