சவுதி அரேபியா உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் தேர்தல் என்பதே அபூர்வம் ஆகும். இதற்கு முன்பு 2005 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்து உள்ளது. இதிலும் ஆண்கள் மட்டுமே போட்டியிட்டனர். 

images

இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை. கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதும் அடங்கும்.

இந்தநிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில் இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. மேலும், 1,050 இடங்களில் மன்னர் ஒப்புதலுடன் நியமனங்கள் செய்யப்படும். பொதுவாக்கெடுப்புக்கான தொகுதிகளில் 979 பெண்கள் உள்பட 7 ஆயிரம் பேர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் கடந்த 2 நாட்களாக எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதில் சிறிய கிராமம், பெரிய நகரங்கள் என நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பரவலாக 20 பெண்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

இது, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மொத்த கவுன்சிலர்களில் சுமார் 1 சதவீதம் ஆகும். மன்னர் ஒப்புதலுடன் மேலும் 1050 கவுன்சிலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைநகர் ரியாத்தில் அதிக பட்சமாக 4 பெண்கள் கவுன்சிலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் 2 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.