திருத்தம் செய்யப்பட்ட பருவ நிலை மாற்றம் குறித்த இறுதி ஒப்பந்தம் தயார் : மாநாட்டில் இன்று தாக்கல் !

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா, இந்தியா உள்ளிட்ட 195 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

APTOPIX France Climate Countdown

2 வாரங்கள் நடந்த இந்த மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. அதை தொடர்ந்து மாநாட்டில் நிறைவேற்றப்படக் கூடிய ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.

பருவ நிலை மாற்றத்தை தடுக்க எதிர்காலத்தில் கார்பன் – டை – ஆக்சைடு வெளியேற்றும் அளவின் கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு இந்தியாவும், சீனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீது கட்டுப்பாடுகளை அதிகரிக்கக்கூடாது என வலியுறுத்தின.

இதனால் பருவ நிலை மாற்றம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி இந்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜடேகரை சந்தித்து 3–வது முறையாக பேச்சு வார்த்தை நடத்தினார். அதே போன்று சீன பிரதிநிதிகளிடமும் பேசப்பட்டது.

அதை தொடர்ந்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தம் மாநாட்டின் இறுதி நாளான இன்று தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக அதுகுறித்து விவாதம் நடைபெற உள்ளது.

ஒப்பந்தத்தை மாநாடு நடத்தும் பிரான்ஸ் நாட்டின் மந்திரி தாக்கல் செய்கிறார். கடந்த 2009–ம் ஆண்டு கோபன் ஹேகனில் நடந்த மாநாடு தோல்வியில் முடிந்தது. தற்போது அது போன்ற நிலையை தவிர்க்க தீவிர முயற்சி மேற்கொள்வதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.