நாளை நகராட்சி தேர்தல் : சவுதியில் பெண்கள் வாக்களிக்க முதன் முறையாக அனுமதி !

நாளை நடைபெறும் நகராட்சி தேர்தலில் சவுதி அரேபியாவில் பெண்கள் ஓட்டுப்போட முதன் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அங்கு நடைபெறும் தேர்தல்களில் பெண்கள் போட்டியிட முடியாது. ஓட்டு போடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

saudi-arabia

இவற்றை எதிர்த்து பல ஆண்டுகளாக அங்குள்ள பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் தேர்தலில் பெண்கள் போட்டியிடவும், வாக்களிக்கவும் தற்போதைய மன்னர் சல்மான் அனுமதி அளித்தார். இந்த நிலையில் அங்கு நாளை (12–ந் தேதி) நகராட்சி தேர்தல் நடக்கிறது.

அதில், தங்கள் உரிமைகளுக்காக போராடிய பெண்கள் தங்கள் வாழ்நாளில் முதன் முறையாக ஓட்டு போடுகிறார்கள். அதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் பெண்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அங்கு அவர்கள் ஆண்களிடம் நேருக்கு நேராக முகத்தை பார்த்து பேசக்கூடாது. ஏதாவது தடுப்புக்கு பின்னால் நின்றே பேச வேண்டும். அல்லது அவர்களது ஆண் உறவினர்கள் உடன் இருக்க வேண்டும்.

தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்கள் மற்றும் விளம்பர பலகைகள் மற்றும் சமூக வலை தளங்களை பயன்படுத்த கூடாது. டெலிவிஷனில் தோன்றி பிரசாரம் செய்யக்கூடாது. அது போன்று ஆண் வேட்பாளர்களும் பெண்களிடம் நேருக்கு நேராக பேசி ஓட்டு கேட்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்தாலும் நாளை நடைபெறும் தேர்தல் மூலம் சவுதி அரேபிய பெண்கள் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கின்றனர். ஒன்று தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, மற்றொன்று தேர்தல் ஓட்டு போடுவதாகும்.