மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமனம்!

எஸ்.எம்.அறூஸ்
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். மஹ்றூப் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின்  அயராத முயற்சியினாலேயே ஏ.எம்.மஹ்றூப்  மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் ரிசாத் பதியுதீனால் இன்று புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.
11205030_1529842980667948_2242620205671385700_n_Fotor
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட ஏ.எம்.மஹ்றூப் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏ.எம்.மஹ்றூப் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் இருந்தவர் என்பதுடன் இந்தக் கட்சியிலிருந்து விலகியே அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
தமிழ்,முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சுசந்த புஞ்சிநிலமே மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக பதவி வகித்திருந்தார்.