ரணில் செய்த உதவிக்கு கைமாறாக ஜனாதிபதி இம்முறையை விட்டுக் கொடுக்கலாம் -எஸ். எம். சபீஸ்

 

புதிய தேர்தல் திருத்தச் சட்டம் அங்கீகரிக்கப்படுமா?
தேர்தல் முறையைப் பொறுத்து வேட்பாளர்கள் தெரிவு இடம்பெறும்

 

சப்றின்

வட்டார முறையிலான தேர்தல் எவ்வகையிலும் ஐ தே கட்சிக்கு சாதகமாக அமையப் போவதில்லை என்பதனால் ஜனாதிபதி; ரணில் விக்ரமசிங்க செய்த உதவிக்கு கைமாறாக இம்முறையை விட்டுக் கொடுக்கலாம் எனவும் எதிபார்க்கப்படுகிறது என தேசிய காங்கிரஸ் உறுப்பினரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான எஸ். எம். சபீஸ் தெரிவித்தார்.

SM Safees

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

நாட்டில் தேசிய அரசாங்கம் என்ற போர்வை இருந்தாலும் ஐ. தே. கட்சியின் ஆட்சிதான் நடைபெறுகிறது. இவ்வேளையில் வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பழைய விகிதாசார முறையில் நடத்தப்பட வேண்டும் என ஐ. தே. கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. இருப்பினும் ஜனாதிபதி தலைமையில் இயங்கும் அணியினர் திருத்தி அமைக்கப்பட்ட புதிய வட்டார முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இவர்களின் வேண்டுகோள் அங்கீகரிக்கப்படுமா என பார்த்தால், ஐ தே கட்சியின் செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திடத்தில் பலமாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதனால் இவ்வணியினரின் விருப்பங்களையும் இலகுவில் நிராகரித்துவிட முடியாது.

வட்டார முறையிலான தேர்தல் எவ்வகையிலும் ஐ. தே. கட்சிக்கு சாதகமாக அமையப் போவதில்லை என்பதனால் ஜனாதிபதி, . ரணில் விக்ரமசிங்க செய்த உதவிக்கு கைமாறாக இம்முறையை விட்டுக் கொடுக்கலாம் எனவும் எதிபார்க்கப்படுகிறது . அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதியின் அணியினர் மறுத்தால் தேர்தல்முறை மாற்றத்துக்கான அனைத்து வேலைகளும் கடந்த அரசாங்கத்தில் தே கா தலைவர் அதாஉல்லாவினால் நிறைவு செய்யப் பட்டிருந்தாலும் அதனை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ஒப்பமிட்டு பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனும் சரத்து மாத்திரம் நிறைவடையாமல் நிலுவையில் உள்ளது. எனவே ஐ. தே. கட்சி இதனை ஆதரிக்குமா என்ற கேள்வியும் இதற்குள் புதைந்து கிடக்கிறது.

ஆகவே தேர்தல் முறையினை வைத்தே கட்சிகள் வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என தீர்மானிக்கும் காரணம் பழைய முறையில் தேர்தல் நடத்துவதென்றால் 40 சதவீதமானவர்கள் 35 வயதுக்கு குறைந்த இளைஞர்கள் நிறுத்தப்படுவது கட்டாயமானதாகும்.

 

வட்டார முறை என்று வருகின்றபோது கட்சியினை விட தனிமனித செல்வாக்கு மேலோங்கிக் காணப்படும். ஆகவே அதற்கு ஏற்றமாதிரி வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வேண்டி ஏற்படும். ஆகவேதான் எல்லாக் கட்சிகளும் பொறுமைகாத்து வருவதனை நீங்கள் அவதானிக்கலாம் என்று தெரிவித்தார்.