நைஜீரியா அருகே லேக் சாத் தீவில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்: 27 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா அருகே உள்ள லேக் சாத் தீவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல்களில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

88d5a94a-ee2b-4ef6-900b-0ab2e83b81d2_S_secvpf

நைஜீரியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் போகோஹாரம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தொடர் தீவிரவாத தாக்குதல் காரணமாக நைஜீரியாவுக்கு அருகில் உள்ள சாத் ஏரி (லேக் சாத்) பிராந்தியத்தில் கடந்த மாதம் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று லேக் சாத்தில் உள்ள லோலோ பாவ் தீவில் மூன்று தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் படுகாயமடைந்தனர். 

மார்க்கெட் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் தங்களது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு வெடிக்க செய்ததாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாத் ஏரியானது நைஜீரியா, நைஜர், கேமரூன் மற்றும் சாத் உள்ளிட்ட 4 நாடுகளின் எல்லைகளுக்கு உட்பட்டது. 

கடந்த 2009-ம் ஆண்டு முதல் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை சுமார் 17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நைஜீரிய நாட்டில் தான் அதிக தாக்குதல் நடைபெற்றுள்ளது.