தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

இலங்கை சிறைகளில் உள்ள 33 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

Jayalalithaa_269092f

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை நேற்று நள்ளிரவில் இலங்கை கடற்படையினர் 2 படகுகளுடன் சிறைபிடித்துள்ளனர். பின்னர் அவர்களை தலைமன்னார் கொண்டு சென்றுள்ளனர். இதேபோல், கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் விசைப் படகுடன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 50 படகுகள் இலங்கையில் பராமரிப்பின்றி உள்ளன. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும் சேர்த்து இலங்கை சிறைகளில் உள்ள 29 மீனவர்கள் மற்றும் படகு பழுதானதால் வழிதவறிச் சென்று இலங்கையில் சிக்கித்தவிக்கும் 4 மீனவர்கள் என மொத்தம் 33 பேரையும் விடுவிக்க தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 53 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.