வெள்ளை மாளிகையைத் தகர்த்து ஒபாமாவைக் கொல்வோம் – ஐ.எஸ் மிரட்டல்

 

imagesபிரான்ஸில் நடத்தியது போல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைத் தகர்க்கப் போவதாகவும் தற்கொலைப்படை மூலம் இருநாட்டு அதிபர்களையும் கொலை செய்யப் போவதாகவும் ஐ.எஸ் தீவிரவாதிகள் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பிரான்ஸில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 129க்கு மேற்பட்டோர் பலியாயினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (19) ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து வீடியோ ஒன்று வெளியானது.
‘ரோமுக்கு முன் பாரீஸ்’ என்ற தலைப்பில் அந்த வீடியோ 6 நிமிடம் அமைந்துள்ளது.

அதில், பிரான்ஸ் தாக்குதலின் காட்சிகளை வெளியிட்டு அதைப் பாராட்டியிருந்தனர்.

பின் அமெரிக்காவின் நியூயார்க் நகரைக் காட்டி தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்தனர்.

பிரான்ஸ் நினைவிடங்கள், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை ஆகியவற்றை தகர்க்கப் போவதாகவும் அந்த வீடியோவில் கூறினர்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே ஆகியோரை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் கொல்வோம் எனவும் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் இந்த வீடியோ மிரட்டலை முக்கியமானதாகத் தாம் கருதுவதாகவும் அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.