ரஷ்ய விமானத்தை தாக்கியவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தேடி பிடித்து தண்டிப்போம் : புதின் சபதம் !

Vladimir-Putin-the-Russia-001 

 எகிப்தின் சினாய் தீபகற்பகத்தில் 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறி விழுவதற்கு காரணமான தீவிரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை தேடி அழிப்போம் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த 31–ந்தேதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர்.

விமானம் விபத்துக்குள்ளான பகுதி, ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகும். அந்த விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் உடனே அறிவிக்கவும் செய்தனர். இந்நிலையில், விமானத்தை தீவிரவாதிகள் வெடிபொருட்கள் மூலம் வெடித்து சிதற வைத்துள்ளனர். விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து ஒரு பயங்கரவாத தாக்குதலே காரணம் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டின் பாதுகாப்பு துறை வல்லூநர்களிடம் பேசுகையில் “இது போன்ற தீவிரவாத தாக்குதலை சந்திப்பது ரஷ்யாவிற்கு ஒன்றும் புதிதுயில்லை.  விமானம் வெடித்து சிதறி விழுவதற்கு காரணமான தீவிரவாதிகளை தேடி கண்டுபிடிப்போம்.  அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை பிடித்து தண்டிப்போம்” என தெரிவித்துள்ளார்.