அகவை 66 இல் கால் பதிக்கும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி!

zahira

 

-எம்.வை.அமீர் –

 

66 வது அகவையில் காலடியெடுத்து வைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஸ்தாபகர் தினம் நேற்று கல்லூரியின் பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்லூரியின் ஸ்தாபகர் கேட் முதலியார் மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் அவர்களின் பேரன் டாக்டர் அர்ஸத் காரியப்பர், கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதனையும் கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்டொன்றினை நாட்டி வைப்பதனையும் கல்லூரியின் உதவி அதிபர்களான ஏ.பி.முஜீன் , எம்.எச்.எம்.அபுபக்கர் , எம்.எஸ்.அலிகான் , எம்.ஐ.எம்.அஸ்மி , அன்வர் அலி  , பகுதித்தலைவர் ஏ.ஆர்.எம்.யுசுப் ஆகியோர் அருகில் நிற்பதனையும் படங்களில் காணலாம்.

s1_Fotor

இந்நிகழ்வை முன்னிட்டு ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எம்.இப்றாஹிம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை இங்கு பிரசுரமாகிறது.

இலங்கையின் நாலாபுறமும் சர்வதேச ரீதியிலும் புகழ்ந்து பேசப்படுகின்ற ,இலங்கை முஸ்லீம்களின் தேசிய சொத்து என வர்ணிக்கப்படுகின்ற , இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள் ஒவ்வொரு வருடமும் அதிகளவிலான மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவருகின்ற ஒரு பாடசாலையாக கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி இன்று திகழ்கின்றது.

கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவுமிருந்த மர்ஹும் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்களின் வேண்டுகோளின் பேரில்அப்போதய கல்வியமைச்சர் திரு.நுகவெல அவர்களால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வழங்கிய அவரது சொந்தக் காணியில் 16.11.1949 ஆம் ஆண்டு இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

மர்ஹும் எம்.ஐ.எம்.ஏ.காதர் அவர்களை முதல் அதிபராகவும் மர்ஹும் எம்.எம்.இப்றாஹிம் அவர்களை முதல் ஆசிரியராகவும் கொண்டு 4 மாணவர்களுடன் சாய்ந்தமருது சிரேஸ்ட பாடசாலை என்ற பெயரில் ஓலைக் கொட்டில் ஒன்றில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

முதல் அதிபராக 16.11.49 இல் கடமையேற்ற மர்ஹும் எம்.ஐ.எம்.ஏ.காதர் 23.07.1950 வரை அதிபராக கடமையாற்றினார். இதன் பின்னர் 24.07.1950 முதல் 06.08.1950 வரை மர்ஹும் எம்.எம்.இப்றாஹிம் அதிபராக கடமையாற்றினார்.அதன் பின்னர் 07.08.1950 முதல் 31.12.1950 வரையும் திரு.ஆர்.பொன்னப்பா அதிபராக இருந்தார்.

ஓலைக் கொட்டிலுடன் இயங்கிய இப்பாடசாலை 1956 ஆம் ஆண்டு முதல் நிதந்தர கட்டிடமாக ஒரு விஞ்ஞான ஆய்வுகூடமும் வர்த்தக மண்டபம் என அழைக்கப்படும் வகுப்பறை கட்டிடமும் அமைக்கப்பட்டன. இது 01.01.1951 முதல் 1956 வரையிலான காலப்பகுதியில் அதிபராக இருந்த மர்‘ஹும் எம்.ஐ.எம்.மீராலெவ்வை அவர்களின் காலப்பகுதியாகும்.

நான்காவது அதிபராக கடமையேற்ற மர்ஹும் கே.எல்.சின்னலெவ்வை அவர்களுக்கு துணையாகவிருந்த மர்ஹும் எஸ்.எம்.எம்.சாஹிப் மௌலவி ( சேகு இப்றாஹிம் மௌலவி ) அவர்களுடன் அதிபர் இணைந்து 1957 ஆம் ஆண்டில் பாடசாலை வளாகத்திலுள்ள மஸ்ஜிதுல் ஸாஹிரா பள்ளிவாசல் அமைக்கப்பட்டு, சமய கலாசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 15.02.1960 முதல் 20.06.1961 வரையும் மர்ஹும் ஏ.எம்.மஜீட் அவர்களும் 21.06.1961 முதல் 31.12.1961 வரையும் மீண்டும் மர்ஹும் எம்.எம்.இப்றாஹிம் அவர்களும் 01.01.1962 முதல் 31.12.1962 வரை மர்ஹும் வீ.ஜீ.என்.சரீப்தீன் அவர்களும் , 01.04.1964 முதல் 15.10.1966 வரை மர்ஹும் கே.எம்.அபுபக்கர் அவர்களும் , 16.10.1966 முதல் 31.01.1971 வரை மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களும் ,01.02.1971 முதல் 08.06.1971 வரை எம்.ஐ.ஜுனைதீன் அவர்களும் 09.06.1971 முதல் 16.08.1971 வரையும் மீண்டும் மர்ஹும் எம்.ஐ.எம்.மீராலெவ்வை அவர்களும் 17.08.1971 முதல்03.03.1972 வரை மீண்டும் எம்.ஐ.ஜுனைதீன் அவர்களும் , 04.03.1972 முதல் 30.10.1972 வரை மர்ஹும் ஏ.ஆர்.ஏ.அஸீஸ் அவர்களும் 01.11.1972 முதல் 03.03.1975 வரை கே.எல்.அபுபக்கர்லெவ்வை அவர்களும் , 04.03.1975 முதல் 25.10.1975 வரை மீண்டும் மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களும் , 26.10.1979 முதல் 31.01.1985 வரை மர்ஹும் எம்.எம்.எம்.இப்றாஹிம் அவர்களும் 01.02.1985 முதல் 15.10.1989 வரை சட்டத்தரணி எம்.ஸீ.ஆதம்பாவா அவர்களும் , 16.10.1989 முதல் 21.04.1999 வரை ஏ.எம்.ஹுசைன் அவர்களும் , 22.04.199 முதல் 20.05.199 வரை எம்.எம்.இஸ்மாயில் அவர்களும் , 21.05.1999 முதல் 24.11.1999 வரை ஏ.எம்.முஸ்தபா அவர்களும் , 25.11.1999 முதல் 24.08.2000 வரை ஏ.பீர்முஹம்மட் அவர்களும் , 25.08.2000 முதல் 17.01.2006 வரை மீண்டும் ஏ.எம்.முஸ்தபா அவர்களும் , 18.01.2006 முதல் 07.07.2010 வரை திருமதி மர்ஜுனா ஏ காதர் அவர்களும் 08.07.2010 முதல் 28.05.2012 வரை மீண்டும் எம்.எம்.இஸ்மாயில் அவர்களும் , 29.05.2012 முதல் 30.05.2012 வரை எம்.எஸ்.எம்.ஹம்ஸா அவர்களும் , 01.06.2012 முதல் 31.12.2013 வரை ஏ.ஆதம்பாவா அவர்களும்  அதிபர்களாக கடமையாற்றியுள்ளதுடன் 01.01.2014 முதல் இன்று வரை பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்கள் மிகவும் சிறப்பாக கல்லூரியை வழிநடத்தி வருகின்றார்.

மர்ஹும் கே.எம்.அபுபக்கர் அவர்கள் அதிபராக இருந்தபோது மாணவர் விடுதி அமைக்கப்பட்டு க.பொ.த. உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. இவரது அயராத உழைப்பின் காரணமாக மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல ஆரம்பித்தனர்.இவரைத் தொடர்ந்து எஸ்.எச்.எம்.ஜெமீல் தலைமையில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது. இக்கல்லூரி இதன் பின்னர் தேசிய ரீதியில் புகழ்புத்த கல்லூரியாக மாற்றம் பெற்றது. மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அதிபராக இரு தடவைகள் பதவி வகித்த காலத்தில் கல்வி , கட்டொழுங்கு, நிருவாக ஒழுங்கமைப்பு என பல்வேறு துறைகளிலும் இக்கல்லூரி உயர்ந்து காணப்பட்டது.

அல்ஹாஜ் கே.எல்.அபுபக்கர் அவர்களின் அதிபர் பதவிக்காலத்தில் இக்கல்லூரி பௌதீக வளர்ச்சிலும் விளையாட்டுத் துறையிலும் அம்பாறை மாவட்டத்திலும் தேசிய ரீதியிலும் பெரும் சாதனைகள் படைத்திருந்தது. அப்போது கல்முனைத் தொகுதி தேசிய  அரசுப் பேரவை உறுப்பினர் மர்ஹும் எம்.சீ.அஹமது அவர்கள் இவ்வதிபருக்கு பக்க துணையாகவிருந்து இக்கல்லூரியின் வளர்ச்சியில்பெரிதும் உதவினார்.

1973 ஆம் ஆண்டு அப்போதய கல்வியமைச்சர் மர்ஹும் காயதே மில்லத் டாக்டர் பதியுதீன் மஹ்மூத்தலைமையில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ்த்தின விழா இக்கல்லூரிக்கு பெரும் மகுடத்தைச் சூட்டியது.. இதன் போதுதான் கல்லூரியின் திறந்தவெளியரங்கு அமைக்கப்பட்டது. இதற்கும் அதிபர் கே.எல்.அபுபக்கர்லெவ்வை காரணகர்த்தாவாக அமைந்திருந்தார்.

தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வந்த இக்கல்லூரி 1978 ஆம் ஆண்டில் வீசிய பாரிய சூறாவளியினால் பௌதீக வளங்களும் , ஆவணங்களும்  அழிக்கப்பட்டிருந்தன. எனினும் அப்போதய அதிபர் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களும் அவரது பிரதி அதிபர்களும் மற்றும் ஆசிரியர் குழாமும் அயராது பாடுபட்டு இக்கல்லூரியை பழைய நிலைக்கு கொண்டுவர உதவினார். மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் இரண்டாவது தடவை கல்லூரியைப் பொறுப்பேற்ற பின்னர் 1975 ஆம் ஆண்டின் பிற்பட்ட காலத்தில் இங்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ,பழைய மாணவர் சங்கம் , என்பன புனரமைக்கப்பட்டு, கல்லூரி வளர்ச்சியில் பெற்றார்களும் பழைய மாணவர்களும் பங்களிப்புச் செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் , மர்ஹும் எம்.எம்.எம்.இப்றாஹிம் , சட்டத்தரணி எம்.ஸீ.ஆதம்பாவா ஆகிய அதிபர்களின் காலத்தில்  இக்கல்லூரியின் உயர்தரம் மிகவும் சிறப்பாக இயங்கி , இந்நாட்டின் சகல பல்கலைக்கழகங்களிலும் இக்கல்லூரி மாணவ மாணவிகள் அனுமதி பெற்று பொறியலாளர்கள் , வைத்தியர்கள் , சட்டத்தரணிகள், விஞ்ஞான , கணித , கலை மற்றும் வர்த்தகத்துறையில் பட்டதாரிகள் கற்று வெளியேறி இக்கல்லூரிக்கும் தாம் பிறந்த மண்ணுக்கும் சமூகத்திற்கும் புகழ் தேடிக்கொடுத்தனர். இன்று இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் ஆகக் கூடுதலான மாணவர்களை அனுப்பி வைத்திருக்கும் ஒரே முஸ்லிம் கல்லூரியாக தேசிய ரீதியில் இக்கல்லூரி தலைநிமிர்ந்து நிற்கின்றது.

05.01.1971 ஆம் ஆண்டு பெண்களுக்காக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்படும் முன்னர் கலவன் பாடசாலையாகவிருந்த இக்கல்லூரி பின்னர் ஆண்கள் பாடசாலையாக தோற்றம் பெற்றது.

இக்கல்லூரி வளர்ச்சியில் இப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்த அரசியல்வாதிகளின் சேவை மிகவும் பாராட்டத்தக்கது.

மர்ஹும்களான  கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் , எம்.மேர்ஸா, எம்.சி.அஹமது , ஏ.எம்.சம்சுதீன் , அமைச்சர் எம்.எச்.எம்.அஸ்றப் , றிஸ்வி சின்னலெவ்வை ஆகியோருடன் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் , பேரியல் அஸ்றப் , பிரதி அமைச்சர்களான எம்.எம்.மயோன் முஸ்தபா , எஸ்.நிஜாமுதீன் , எச்.எம்.எம்.ஹரீஸ் போன்றோரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல் , சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் , கே.எம்.ஏ.றஸாக் ( ஜவாத்) கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் , பிரதேச செயலாளர்கள் , வலய கோட்ட மாகாண கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் தம்மாலான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் இக்கல்லூரிக்கு வழங்கியிருப்பதுடன் தற்போதும் வழங்கியும் வருகின்றார்கள் ,

66 வது  வருடத்தில் காலடியெடுத்து வைத்துள்ள இக்கல்லூரி மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகின்றேன்.