புரட்சிக்குப் பிறகு முதன் முதலாக பெண் தூதரை நியமித்த ஈரான் !

1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் ஈரான் முதன் முதலாக பெண் ஒருவரை தூதராக நியமித்துள்ளது. 

இந்த பெருமை மட்டுமல்ல, ஈரானின் முதல் பெண் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் என்ற பெருமையும் மெர்சியா அப்கமையே சேரும். இவரது நியமனம் குறித்து அந்நாட்டு ஊடகங்கள் கடந்த ஏப்ரல் மாதமே முணு முணுத்தாலும், அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. 

07d77b84-fb15-464e-a43a-e02241d26853_S_secvpf
இந்நிலையில், ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் ஜாவத் ஜரிப், இதுவரை வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளராக இருந்த மெர்சியா அப்கம் இனி மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் உள்ள தூதரகத்துக்கு தலைமை வகிப்பார் என்று நேற்று அறிவித்துள்ளார். 

மேலும், அப்கமை தூதராக தேர்ந்தெடுக்க சில நிமிடங்களே ஆனதாகவும், அவருக்கு பிறகு செய்தி தொடர்பாளராக யாரை நியமிப்பது என்பதை முடிவு செய்யவே 4 மாதங்கள் ஆனதாகவும் குறிப்பிட்ட அவர், கடந்த 2 வருடங்களாக அப்கமின் துல்லியமான மற்றும் தைரியமான செயல்பாடுகளை வெகுவாக பாரட்டினார். 

ஒரு பெண்ணின் மீது நம்பிக்கை வைத்து தைரியமாக இந்த முடிவை எடுத்ததற்காக ஜரீப்பை ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.