அமைச்சர் ஹக்கீமின் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்ற சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக, தியாகச் சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதிபூணுவோமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஈதுல் அழஹா’ தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Rauff-Hakeem
அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நபி இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை வலியுறுத்தும் ஹஜ்ஜுப் பெருநாளை உலகெங்கிழுமுள்ள முஸ்லிம்கள் வழமை போல பல்வேறு வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் கொண்டாடுகின்றனர்.
உலகெங்கிழுமுள்ள முஸ்லிம்கள் தாம் சிரமப்பட்டு உழைத்த பணத்தை சேமித்து புனித மக்கா நகருக்குச் சென்று ஹஜ் கடமையை இனிதே நிறைவேற்றுகின்றனர்.
பல்வேறு நாடுகளில் வறிய மக்கள் கூட புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்காக சிறுகச்சிறுக பணத்தை சேமிக்கின்றனர். அந்தளவுக்கு புனித மக்காவுக்கும், புனித மதீனாவுக்கும் செல்வதற்கு முஸ்லிம்கள் ஆர்வம் செலுத்துகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், குறுகிய அரசியல், கட்சி மற்றும் இயக்க ரீதியான வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக வாழ்வதற்கு முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் முன்வர வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீமின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக உதவியாளர்