இலங்கை தொடர்பான ஐ.நா யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியீடு !

 இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். 

ஐநா மனித உரிமை பேரவையின் 30வது கூட்ட தொடக்க உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

saith al husain
´ஆறு வருடங்களுக்கு முன் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் பாரிய யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்று பொதுமக்கள் உயிர் பலியானார்கள். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பேரவை கூடுதல் கவனம் செலுத்துகிறது. 2014 மார்ச் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய எனது ஆலோசனையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கையை புதன்கிழமை வெளியிட உள்ளேன்.

அதில் கடுமையான யுத்த தீவிரத்தன்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனவரி தேர்தலின் பின் ஜனாதிபதி சிறிசேன தனது தலைமையில் புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்வைத்துள்ள நோக்குகளை நாம் வரவேற்கிறோம். ஆனால் இலங்கையர்களுக்கான பொறுப்புக்கூறல், நம்பகத்தன்மை, கடந்தகால தோல்வி தொடர்பில் ஆழமான நிறுவன மாற்றங்கள் நோக்கி ஐநா மனித உரிமை பேரவை தொடர்ந்தும் செயற்படும்´ என்று கூறினார்.