அமைச்சரவையில் அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றில் வாத விவாதங்கள்…!

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அதன் அமைச்சரவையில் அதிகரிப்பு மேற்கொள்ளவென பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் ஆரோக்கியமான வாத விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

parliament
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை சவாலுக்கு உட்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டார். 

19வது திருத்தச் சட்டத்தின்படி தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்றில் அதிக ஆசனத்தை பெறும் கட்சி, பாராளுன்றில் உள்ள ஏனைய சுயாதீன குழுக்களுடன் இணைந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து அமைக்கும் அரசாங்கம் என கூறினார். 

அப்படியாயின் பாராளுமன்றில் அதிக ஆசனம் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய சுயாதீன குழுக்கள் அல்லது கட்சிகளுடன் இணைந்து அமைக்கும் அரசாங்கமே தேசிய அரசாங்கம் மாறாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் மாத்திரம் ஒப்பந்தம் செய்து அமைக்கும் ஆட்சி தேசிய அரசாங்கமாக அமையாது என அநுரகுமார கூறினார். 

பிரதான கட்சிகள் மூன்று ஒன்றிணைந்தே தேசிய அரசாங்கம் அமைத்துள்ளதாகவும் 19வது திருத்தம் செய்யும்போது ததேகூ, ஜேவிபி தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முடியாது என்று கூறியதால் அந்த சமயத்திற்கு ஏற்ப யாப்புத் திருத்தம் செய்யப்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறினார். இங்கிலாந்து பாராளுமன்றில் இவ்வாறான சந்தர்ப்பம் ஏற்பட்டபோது மூன்று கட்சிகள் மாத்திரம் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்ததாக பிரதமர் கூறினார். 

இதேவேளை, தேசிய அரசாங்கம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள வியாக்கியானம் தவறு என்றும் ஜனாதிபதி கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியுமே தவிர அதற்கு தேசிய அரசாங்கம் ஒன்று பெயரிட முடியாது என்றும் தேசிய அரசாங்கம் என்றால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். 

எனினும் அனைத்து கட்சிகளும் இணைந்தது தேசிய அரசாங்கம் அல்ல என்றும் அதிகூடிய ஆசனம் பெறும் கட்சி இரண்டாவது அதிக ஆசனம் பெறும் கட்சியுடன் கூட்டிணைந்து அமைப்பது தேசிய அரசாங்கமாகும் என்றும் பாராளுன்றில் உள்ள ஏனைய அனைத்து கட்சிகளுடனும் என்ற பதம் 19வது திருத்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

ஆனால் தேசிய அரசாங்கம் குறித்த வியாக்கியானங்களில் தெளிவு இல்லை என்பதால் சபாநாயகர் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெற்று தீர்ப்பு அளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

இதேவேளை, பாராளுமன்றில் அதிகூடிய பெரும்பான்மை பெறும் கட்சி ஏனைய பெரும்பான்மை பெறும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கம் அமைக்க முடியும் என்றும் இவ்விடயத்தில் உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை பெற வேண்டியதில்லை என்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். 

இறுதியில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தானும் இருப்பதால் தேசிய அரசாங்கம் அமைக்க இதைவிட வேறென்ன வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய விரைவில் தீர்மானம் ஒன்றை அறிவிக்கவுள்ளார். அதற்காக பாராளுமன்றம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.