அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் காணிகளை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏன் கையளிக்க முடியாது – ஹரீஸ் – MP கேள்வி

அபு அலா 

 

யாழ்ப்பாணத்திலும், சம்பூரிலும் உச்ச பாதுகாப்பு வலயமாக கருத்தப்பட்ட காணிகளை தமிழ் மக்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கையளிக்க முடியுமென்றால், ஏன் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் காணிகளை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கையளிக்க முடியாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பி பேசினார்.

2 harees

 

நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர், பைசால் காசிம் ஆகியோரினது வெற்றிக்கு வாக்களித்த அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் காலடிக்குச் சென்று நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று இரவு (29) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை ஹபானா பூங்காவில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

 

இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியின் பெரும் பங்காளர்களாக தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்து வருகின்றனர். இந்த நல்லாட்சியின் அனுகூலங்களை எமது முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும்.

 

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் எமது கட்சி அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்று அம்பாறை மாவட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இவ்வெற்றிக்காக நம்பிக்கையோடு கட்சிக்கும், எமக்கும் வாக்களித்த அட்டாளைச்சேனை வாழ் மக்களுக்கும், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

இத்தேர்தல் வெற்றியின் பிற்பாடு அட்டாளைச்சேனை மக்கள் கட்சியோடு பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதை எங்களால் உணரமுடிகின்றது. அந்த எதிர்ப்பார்ப்புக்கள் அனைத்தும் எமது கட்சிக்கு கிடைக்கவிருக்கின்ற இத்தருவாயில் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு ஒரு அரசியல் அதிகாரத்தை கொடுக்க கட்சியின் தலைமை முடிவுவெடுத்துள்ளது.

 

கடந்த தேர்தலின்போது, அட்டாளைச்சேனை மக்களுக்கு ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கட்சியின் தலைவர் தருவதாக வழங்கிய உறுதிமொழியை கட்சியும், அதன் தலைமையும் செவ்வனே நிறைவேற்றும் முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவுக்கு நாங்கள் மூன்று பேரும் பாரிய ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம் தொடர்ந்தும் வழங்கவும் உள்ளோம். இதற்கு ஆதரவாக உயர்பீட உறுப்பினர்களும் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாகவும் உள்ளனர் என்றார்.

1 harees

இக்கூட்டத்தில், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான முஸ்லிம் முழக்கம் அப்துல் மஜீட், அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஆலோசகர்களான அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர், யூ.எம்.வாஹிட், பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், கட்சிப் போராளிகள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

3 harees