வசீம் தாஜூதீனின் ஜனாஸா விவகாரம்: சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரிய இரகசிய பொலிஸார் !

 THAJUDEEN

 பற்கள் உடைக்கப்பட்டு மற்றும் கைக்கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸாவை தோண்டியெடுத்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை இரகசிய பொலிஸார் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்தவுடன் நீதவானின் உத்தரவு உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது ஜனாஸா புதைக்கப்பட்டுள்ள மையவாடிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவரது சடலத்தை தோண்டியெடுத்து சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு மீண்டும் உட்படுத்துவதற்கு நீதிமன்றத்தின் உத்தரவை, இரகசிய பொலிஸார் பெற்றுக்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்தே அந்த சவக்குழியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவரது ஜனாஸா, தெஹிவளை பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள மையவாடியிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் மரணம், விபத்தினால் ஏற்பட்டது ஒன்றல்ல என்றும் அது படுகொலை என்றும் இரகசிய பொலிஸார், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு ஜூலை 27 ஆம் திகதி  திங்கட்கிழமை கொண்டுவந்தனர். பிரபல்யமான அரசியல்வாதியொருவரின் மகன், இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் இதற்கு முன்னர் கூறியிருந்தனர்.

 அவருடைய மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல் உடைக்கப்பட்டு, விலா எலும்புகள் உடைக்கப்பட்டு, பாதங்கள் கழற்றப்பட்டு பாதங்கள் அசிட்டினால் ஊறவைக்கப்பட்டு, கூரிய ஆயுதத்தை கழுத்தில் ஏற்றி, மொட்ட ஆயுதத்தினால் தாக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

 வெள்ளவத்தை முருகன் வீதியை வசிப்பிடமாக கொண்ட றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன், நாரஹேன் பிட்டியவில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, அவர் பயணம் செய்து கொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவர் மரணமடைந்துவிட்டதாக அந்த காலத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தன.

 அவருடைய சடலம் மறுநாள் 17ஆம் திகதியன்று காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும் காருக்கருகில் கரித்துண்டுகள் கிடந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.