எம்மை ஏமாற்றும் “சமூகப்பரவல்” எனும் தொற்றுநோயியல் வாசகம்

எம்மை ஏமாற்றும் “சமூகப்பரவல்” எனும் தொற்றுநோயியல் வாசகம் – Community Transmission: A Misleading Epidemiological Jargon
———————————————-

தொற்றுநோயியலில் சமூகப்பரவல் என்பது “புதிதாக இனங்காணப்பட்ட குறித்த நோயாளிக்கு யாரிடமிருந்து தொற்று ஏற்பட்டது என்று தொடர்புதடமறியாமல் (fail to contact trace) போதல்” ஆகும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இரண்டாம் அலையில் அறியப்பட்ட COVID-19 பொசிடிவ் ஆனவர்களுக்கு குறித்த தொற்று யாரிடமிருந்து ஏற்பட்டிருக்கிறது என்று தொடர்பு தடமறியப்பட்டுள்ளது (all positive cases were contact traced) என்பதாலேயே நோய்த்தொற்றியற்பிரிவு (epidemiology unit) இன்னும் சமூகப்பரவல் நிகழவில்லை என்று கூறுகிறது.

எமது நாட்டின் தொடர்புதடமறியும் பொறிமுறை (contact tracing strategy) நன்றாகச் செயற்படுவதாலோ என்னவோ இதுவரைக்கும் தொற்றேற்பட்டவர்கள் அனைவரும் தொடர்பு தடமறியப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சென்றால், சமூகப்பரவல் எனும் வரைவிலக்கனத்திற்குள் அகப்படாமலேயே இலங்கையில் அனைவரும் தொற்றுநோய்க்குட்படலாம் என்பதை நீங்கள் புரிவீர்கள்.

“If this goes like this, theoretically, the entire population could be infected without falling into the definition of community transmission”

இன்னொருபுறம், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான COVID-19 பொசிடிவ்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தொற்றுநோயியற் பிரிவும் கட்டுப்பாடிழந்துவிடுவார்கள். அவர்களுக்கு தொடர்புதடமறிதல் சிக்கலாகிவிடும். இந்நிலமையில் சமூகப்பரவல் காணப்படுகிறது என்று கூறுவர்.

சமூகப்பரவல் என்பது ஒரு வரைவிலக்கணமாகும். தொற்றுகின்ற கொரோனா ஊரூராக தொற்றிக்கொண்டுதான் இருக்கிறது. யாரோ கூறியது போல “கொரோனா சமூகப்பரவல் இல்லை, ஆனால் சமூகத்தில் பரவலாகக் காணப்படுகிறது.”

நாட்டுமக்களாகிய நாம் “சமூகப்பரவல் இன்னும் நிகழவில்லை” என்று ஒரு வரைவிலக்கணத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு பாராமுகமாக இருப்போமானால் முழு இலங்கையும் நோய்த்தொற்றுக்கு ஆளாக இன்னும் நிறைய நாட்கள் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

Dr AU Ali Akram

MBBS (SL), MD in Medicine (Col), MRCP (UK)

25102020