நீர் அருந்துவோம் !!

உடலில் இருந்து வெளியேறும் வியர்வைக்கு ஈடுகொடுக்கும் விதமாக உடலில் நீர்ச்சத்தை பேண வேண்டியது அவசியம். தாகத்தை தணிப்பதற்காகவும், சுவைக்காகவும் நிறைய பேர் ஜூஸ், சூப் வகைகளை பருகுவதற்கு விரும்புவார்கள். அதேவேளையில் போதுமான அளவு தண்ணீர் பருகுவதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீராவது பருக வேண்டியது அவசியம். ஆனால் நிறைய பேர் அதனை கவனத்தில் கொள்வதில்லை.

neer

வெளியே செல்லும்போது வெயிலின் தாக்கம் உடலை வருத்தி எடுக்கும். தாகமும், பசி உணர்வும் ஏற்படும். அதனால் போதுமான அளவு தண்ணீர் பருகிவிடுவார்கள். வீட்டிலேயே இருந்தாலோ அல்லது ஏதாவது ஒரு வேலையில் தீவிரமாக கவனம் செலுத்திக்கொண்டிருந்தாலோ போதுமான அளவு தண்ணீர் பருகமாட்டார்கள்.

அப்படியே பருகினாலும் மற்ற சமயங்களில் பருகும் தண்ணீரின் அளவை விட குறைவாகவே இருக்கும். அப்படி இருப்பது உடல் இயக்க செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். பலவித நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும். காலையில் எழுந்ததும் தவறாமல் அரை லிட்டர் அளவாவது தண்ணீர் பருக வேண்டும். அது உடல் உறுப்புகள் சீராக இயங்க வழிவகை செய்யும். வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வரும்போது கண்டிப்பாக தண்ணீர் பருக வேண்டும். அதன் மூலம் உடலில் வைரஸ், பாக்டீரியாக் கள் உள்ளிட்ட நோய் தொற்றுகள் இருந்தால் அவற்றின் வீரியம் குறைந்துவிடும்.

சாப்பிடும்போது தண்ணீர் பருகுவது கூடாது. அதற்கு பதிலாக சாப்பிட தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் பருகலாம். அது சாப்பிட்டு முடித்ததும் செரிமான சக்தியை மேம்படுத்த உதவும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு தண்ணீர் பருகலாம். அது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது ரத்த ஓட்டம் சீராக இயங்க துணைபுரியும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீராவது அருந்துவது நல்லது. தண்ணீரை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக பருகக் கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் அருந்த வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிப்பதாக இருந்தால், அதிக தாகம் எடுக்க வேண்டும். அதற்கு உடல் உழைப்பு தேவை. தண்ணீரை காய்ச்சி அருந்துவதுதான் நல்லது. சீரகம், வெந்தயம் போன்றவற்றை தண்ணீரில் கலந்தும் பருகலாம்.