“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா

athaullah gotabaya

 
தேசிய காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தலைமைத்துவ சபை எடுத்த தீர்மானத்தின் படி இன்று (10) பொதுஜன பெரமுன கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தனர்.
 
தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களின் தலைமையிலான மீயுயர் சபை உறுப்பினர்கள் நேரடியாக சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தனர். 
இங்கு பேசிய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, 
athaullah gotabaya
கடந்த கால மே தின உரையொன்றின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையும் இணைய வேண்டிய அவசியம் குறித்து பேசியதுடன் அதற்கான வேலைத் திட்டங்களையும் செய்துள்ளேன். 
 
உங்கள் முன்னிலையில் உங்களுடைய சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களிடம் கடந்த 2005ஆம் ஆண்டைய தேர்தல்களின் போது நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளான யுத்தத்தை முடிவுக்கு  கொண்டு வருதல், வட- கிழக்கை பிரிக்க வேண்டும், சகல இன மக்களும்  அவரவருக்குரிய உரிமையோடும், சுதந்திரத்தோடும் வாழ வைக்க கூடிய  அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும். என்பதில் முந்தைய இரண்டையும் நாம் எல்லோரும் இணைந்து நிறைவேற்றி உள்ளோம்.  ஆனால் இறுதியான அந்த கோரிக்கை நிறைவேறாமல் இருக்கிறது. 
 
நீங்கள் வெற்றிபெற்று ஜனாதிபதியாக தெரிவாகும் போது சகல இன மக்களும்  அவரவருக்குரிய உரிமையோடும், சுதந்திரத்தோடும், நிம்மதியோடும் வாழ வைக்க கூடிய  அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக அமைந்துள்ளது. 
 
உங்களுடைய வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உழைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேசிய காங்கிரசும் உங்கள் வெற்றிக்காக உழைக்கும் என்றார்.
நூருள் ஹுதா உமர்.