அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும், அரசாங்கத்தின் ஏமாற்று வித்தைகளுக்கு மக்கள் மேலும் ஏமாற மாட்டார்கள்

அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகவே மக்கள் ஜனநாயக வழியில் போராட தலைநகரை நோக்கி வந்தனர். 

ஆனால் பொலிஸார் அவர்களை வழிமறித்து கொழும்பு செல்லவிடாமல் தடுத்துள்ளனர். 

இதன் மூலம் அந்த மக்களின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 எதிர்ப்பு பேரணி காரணமாக அரசாங்கம் மிகவும் பதற்றமடைந்துள்ளது. நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள பொலிஸாரை கொழும்புக்கு அழைத்து எமது ஜனநாயக போராட்டத்தை முடக்க சூழ்ச்சி செய்துள்ளனர்.

பல சவால்களுக்கு மத்தியிலே பாரிய மக்கள் வெள்ளம் இன்று கொழும்புக்கு வந்துள்ளது.

அரசாங்கத்தின் ஏமாற்று வித்தைகளுக்கு மக்கள் மேலும் ஏமாற மாட்டார்கள். எமது போராட்டத்துக்கு பொலிஸார் இடையூறு விளைவிப்பதன் ஊடாக தொடர்ந்து இந்த அரசாங்கத்தின் அடிமைகளாகவே பொலிஸார் செயற்பட போகின்றனர். இதனை பொலிஸார் உணர வேண்டும்.