மொட்டுக்கு வாக்களித்தவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்: அமைச்சர் அர்ஜுன

மகிந்தவிற்கான வாக்களிப்பு எமக்கு கிடைத்த எச்சரிக்கையே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று வட மாகாண பெற்றோலிய கூட்டுத்தாபன முகவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

இது நாடாளுமன்ற தேர்தலோ அல்லது ஜனாதிபதி தேர்தலோ அல்ல. இதில் தடுமாறுவதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமில்லை. ஆனால், மொட்டுக்கு வாக்களித்தவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.கொலை, கொள்ளை மற்றும் மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கியிருந்தால், இந்த நிலமை வந்திருக்காது. இது சம்பந்தமாக அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம்.

இவை தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமருமே பார்க்க வேண்டும். மகிந்தவிற்கான வாக்களிப்பு வெறுமனவே எமக்கு கிடைத்த எச்சரிக்கை. இந்த தேர்தல் தொடர்பாக கிடைத்த இறுதி முடிவு தொடர்பான குறைபாடுகளை நிறைவேற்ற வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியோ, பிரதமரோ கட்சியைப் பார்த்து செயற்படாமல், மக்களை பார்த்து செயற்பட வேண்டும். மக்களை பார்த்து செயற்படும்போது, குறைபாடுகள் வந்தால் இருவரும் பேசி நிவர்த்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.