தேர்தல் என்பது சூதாட்டம் போன்றது பந்தயம் கட்டியவன் வெல்வதற்கே பார்ப்பான் !

 கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் அம்பாறைக்கு வெளியே  ஐக்கியதேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்திருந்த முஸ்லீம் காங்கிரஸ் அம்பாறையில் ஐக்கியதேசிய கட்சியை இதுபோன்று விமர்சித்திருந்தததை நாம் கண்டு கேட்டு கடந்துதான் வந்திருக்கிறோம், அப்போதெல்லாம் முன்னாலும் பின்னாலும் பொத்திக்கொண்டு ஆரவாரமாக கைதட்டி மகிழ்ந்த போராளிகள் இப்போது பொங்கி வருவதை பார்க்கும் போது மண்டையில் சரக்கில்லாதது தெளிவாக புரிகிறது.

அம்பாறையில் ஐக்கியதேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்திருக்கும் முஸ்லீம் காங்கிரஸ் அனுராதபுரத்தில், கம்பஹாவில், கண்டியில், மட்டக்களப்பில், இதே ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்றுதான் சொல்லப்போகின்றது, ஐக்கிய தேசிய கட்சிக்கு அளிக்கப்படும் வாக்குகள் இனவாதத்தை தூண்டும், இரத்த ஆறை ஓடச்செய்யும் என்றுதான் கூக்குரலிடப்போகின்றது இதை எந்த போராளியும் மறுக்க முடியுமா ?

தேர்தல் என்பது சூதாட்டம் போன்றது பந்தயம் கட்டியவன் வெல்வதற்கே பார்ப்பான், ரிசாட் மட்டுமல்ல ஒவ்வொரு தலைவனும் தனது கட்சியின் வெற்றிக்காக பேசவே செய்வான், கிழக்கு மாகாணத்தில் தமிழில் யானைக்கு திட்டியும் கிழக்கிற்கு வெளியே சிங்களத்தில் யானையை புகழ்ந்த ஹக்கீமின் வரலாறு போராளிகளுக்கு மறந்திருக்க வாய்ப்பில்லை.

அம்பாறையில் இருக்கும் மிகப்பெரிய இனவாதி தயாகமகே, யானைக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தயாகமயிற்கு போடப்படும் மாலைகள், அம்பாறை மாவட்டத்தில் யானை வெற்றி கொள்ளும் ஒவ்வொரு ஆசனமும் தயாவிற்கு போடப்படும் உரம், ஐக்கிய தேசியக்கட்சிக்குள் தயாவை அது இன்னுமின்னும் மேலே கொண்டு செல்லும், அம்பாாறை மாவட்டத்தில் இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளின் வரலாற்றை நோக்கினால் அது தயாவின் வரவுக்கு பின் அதிகமாகி இருப்பதை காணலாம், இந்த நிலமை இன்னும் உச்ச நிலையை அடைய நீங்கள் யானைக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் காரணமாகலாம்.

அம்பாறையில் யானைக்கு வாக்களிக்காதீர்கள் என்பது ஏனெனில், அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகையில் 40% ஆனவர்கள் சிங்களவர்கள் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் இவர்களுக்கெல்லாம் பிரதானி தயா எனும் இனவாதி. நீங்கள் வாக்களித்து யானையை வெற்றி கொள்ளச்செய்வது தயாவிற்கு வழங்கும் உறுதிமொழி. நீங்கள் வழங்கும் உறுதிமொழி அடுத்த ஐந்து வருடங்களுக்கு இன்னும் அவர்களை உக்கிரமாக செயற்பட வைக்கும் உங்களிடமிருக்கும் எல்லாமே வேகமாக பறி போகும் அதற்கு துணையாக நீங்கள் வென்று கொடுத்த யானைக்காரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். யாரிடம் போய் ஓலமிடுவீர்கள்.

அதனால்தான் யானைக்கு அம்பாறையில் வாக்களிக்க வேண்டாம் என்கிறோம்.

ஆனால் நீங்களோ மன்னாரை பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள், மன்னாரில் எத்தனை சிங்களவர்கள் வாழ்கிறார்கள் வெறும் 2% தான் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர். இரண்டரை லட்சம் பேர் வாழும் ஒரு பகுதியை பற்றி கூறினால் மூவாயிரம் பேர் வாழும் ஒரு பகுதிக்குள் நுழைந்து ஒப்பிடும் உங்களின் அறிவு வியக்கவைக்கிறது. 

வட மாகாணத்தில் சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாது, தமிழ் பேசும் மக்கள் மட்டும்தான் அங்கு ஆதிக்கம் செலுத்த முடியும் அதனால் வடக்கை பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை உங்களின் மண்ணை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள வழி தேடுங்கள் அது போதும். 

வரும் முன் காப்பவனே சமூகத்தின் தலைவன் வந்த பின் என்ன செய்வதென்று விழி பிதுங்க நிற்பவன் அல்ல தலைவன். 

வரும் முன் காத்துக்கொள்ள சொல்கிறார், அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு அநாதை சமூகமாக நிற்கிறோம், வாழ்விடங்களையாவது காப்பாற்றிக்கொள்ளுங்கள் அதற்குள் சிலை வருவதற்கு முதல்.

-Razana Manaf-