ஜெருசேலம் விவகாரத்தில் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனத்தில் தொடரும் கலவரம்

பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இருநாடுகளுமே அந்த நகரை தங்கள் நாட்டின் தலைநகரம் என்று அறிவித்துள்ளன. ஆனால், அதை பெரும்பாலான நாடுகள் ஏற்கவில்லை.

இந்த நிலையில் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாலஸ்தீனத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிலர் பலியானார்கள்.

 

இந்நிலையில், தற்போது பாலஸ்தீனத்தின் பல பகுதிகளில் மீண்டும் கலவரம் வெடித்தது. இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனம் மக்களுக்கும் இடையே நேற்று கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர்.

இதுகுறித்து பாலஸ்தீனம் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் நாட்டின் எல்லையில் காசா ஸ்ட்ரிப் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஜெருசேலமின் வடக்கு பகுதியில் ஒருவர் இஸ்ரேல் ராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மற்றொரு நபர் ஜெருசேலத்தின் ராம்ல்லா நகரில் உள்ள சோதனைச்சாவடிக்கு அருகில் இஸ்ரேல் எல்லை பாதுகாப்பு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் இஸ்ரேலுக்கு வருவதாக இருந்த நிலையில், கலவரம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனம் மக்களின் நிலைமை புரிகிறது. அவர்கள் சாதாரண நிலைக்கு வர கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்காக நாங்கள் காத்திருப்போம் என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.