நாங்கள் பதவிகளைத் துறந்ததும், அரசு தான் நினைத்ததைச் செய்து முடிக்கும் : சி.வி.விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை பதவிகளை நாம் துறந்தால் அரசு, தான் நினைத்ததைச் செய்துவிடும் எனவும் அந்தப் பதவிகள் முக்கியம் எனவும் கனடாவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவிகளைத் துறந்தால், அது மத்திய அரசுக்கு மிகப் பெரிய அழுத்தம் கொடுப்பதாக அமையும் தானே என்று வினா தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர், பதவி துறப்பதில் ஒரு விதமான பிரச்சினையும் இல்லை. கடந்த 1972ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பதவி துறந்தார். 

அவரது தொகுதியில் 1975ஆம் ஆண்டு தான் தேர்தல் வைத்தார்கள். இடைப்பட்ட காலத்தில் அரசு தான் நினைத்ததைச் செய்து முடித்தது.

அத்துடன், பதவிகளுக்காக ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. எங்களைப் பதவிகளிலிருந்து வெளியேற்றவேண்டும் என்பதற்காகவே அரசு சில வேலைகளைச் செய்யும்.

மேலும், உடனடியாக உணர்ச்சிகரமான தீர்மானத்தை நாங்கள் எடுக்கக் கூடாது. நாங்கள் பதவிகளைத் துறந்ததும், அரசு தான் நினைத்ததைச் செய்து முடிக்கும். 

கேட்டால், அவர்கள் தானே பதவியைத் துறந்தார்கள் என்று சொல்வார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.