அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரச்சினையின் தீர்வு பொறிமுறை குறித்து பிரதமர் ரணில் , சந்திரிக்காவுடன் ஆலோசனை!

 

image

தற்போது எழுந்துள்ள அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரச்சினையின் தீர்வு பொறிமுறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த செவ்வாய்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு மிகவும் காத்திரமானதாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் கருத்துரைத்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஐக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரையில் அது 19வது திருத்தம் தொடர்பில் யோசனையை முன்வைத்துள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்ட கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும். அப்போதே அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.

ரணிலுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையிலான சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து பேசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால, செவ்வாய்க்கிழமை இரவே நாடு திரும்பியமையால் இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை.

இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பொறுத்தவரையில் ஒருப்பிரிவினர் 19வது திருத்தத்துக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர். ஒருபிரிவினர் அதில் மாற்றங்கள் ஏற்படுத்தவேண்டும் என்று கோருவதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.