சம்பூர் அனல் மின் நிலையத்திலிருந்து சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்க திட்டம் !

 எப்.முபாரக் 

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் அமையவுள்ள இந்திய உதவியுடனான அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில் கலந்து கடல் வாழ் உயிரினப் பல்வகைத் தன்மைக்கும் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதற்கான திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்தார்.

ranjith

நேற்று வியாழக்கிழமை (18) சம்பூர் பிரதேசத்துக்;கு மின் சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய  மற்றும் துணை அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர்  நேரடியாக விஜயம் செய்து உத்தேச அனல் மின் நிலையம் அமையவுள்ள இடங்களைப் பார்வையிட்டனர்.

அமைச்சரைச் சந்தித்த உள்ளுர் மக்கள், குறித்த அனல் மின் நிலையத்தை வேறிடத்திற்கு மாற்றம் செய்யுமாறு கோரிய போதும் அந்தக் கோரிக்கையை அமைச்சர் நிராகரித்துள்ளார்.

மக்களுக்கோ சுற்றாடலுக்கோ பாதிப்பு இன்றி பாதுகாப்பான முறையிலேயே இந்த அனல் மின் நிலையம் அமையும் என்று அமைச்சரால் உறுதியும் உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்தாக கூறப்படுகின்றது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் அனல் மின் நிலையத்துக்கு கடல் நீரை உள்வாங்கவும்  அனல் மின் நிலையத்திலிருந்து வெந்நீரை வெளியேற்றவும்  சம்பூர் கரையோரத்திலுள்ள குடாக் கடலை பயன் படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பாக மக்களுடனான சந்திப்பின் போது அமைச்சர்  ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்தாக  கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் கூறினார்.

புதிய திட்டத்தின்  கீழ்  அனல் மின்நிலையத்துக்கு கடல் நீரை உள்வாங்கவும் அங்கிருந்து  வெந்நீரை வெளியேற்றவும்  4 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இலக்கந்தவெளி கடல் பிரதேசத்தைப் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது பற்றி  அமைச்சர்  தங்களிடம் கூறியதாகவும்  குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவித்தார்