சிறுபான்மை இனங்களின் பாதுகாவலன் ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம்தான் !

image

 

தமிழ்-முஸ்லிம் மக்களின் உயிர்களையும் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஒரேயொரு கட்சி ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம்தான்.அந்தக் கட்சியை வெற்றி பெறச் செய்வதன் மூலம்தான் எம்மால் நிம்மதியாக வாழ முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான பெரோஸா முஸம்மில் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமானது.இதை சில பேரினவாதக் கட்சிகள் ஏற்பதில்லை.ஆனால்,ஐக்கிய தேசிய கட்சி இதற்கு முற்றிலும் மாறுபட்டது.மூவினங்களையும் சமமாகவே மதிக்கின்றது.கட்சிக்குள்ளேயே அந்த நிலைமைய நாம் பார்க்கலாம்.

கடந்த காலங்களில் சிறுபான்மை இன மக்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வகுத்த வியூகம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிறுபான்மை இன மக்கள் அனுபவித்து வந்த கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

அது நிரந்தரமான முற்றுப் புள்ளியாக இருக்க வேண்டும் என்றால் நாம் ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சி பீடமேற்ற வேண்டும்.அதுதான் எமக்கு நிரந்தர பாதுக்காப்பைக் கொண்டு வரும்.

அதுபோக,கொழும்பு மாவட்டத்தில் மூவின மக்களும் பல துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.நான் 30வருடங்களாக அந்த மக்களின் துன்பங்களை நீக்கி வருகிறேன்.என்னால் முடிந்த வரை சேவை செய்து வருகின்றேன்.

அந்தச் சேவையை மேலும் விஸ்தரிப்பதற்கு இன்று எனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.அது எனக்குரிய வாய்ப்பு அல்ல.கொழும்பு மக்களுக்கான வாய்ப்பு.அந்த வாய்ப்பை நாம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் கொழும்பு மக்களின் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.அந்த நல்ல மாற்றத்தை நான் நிச்சயம் ஏற்படுத்துவேன்.என்றார்.