ஒரு குறிப்பிட்ட வகை காது கேளாமைக்கு வைரஸ் மூலம் சிகிச்சையளிக்க முடியும்….!

150710120347_deafness_virus_624x351_bbc_nocreditஒரு குறிப்பிட்ட வகை காது கேளாமைக்கு வைரஸ் மூலம் சிகிச்சையளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

சிலவகை காதுகேளாமை பிரச்சினைகளை குணப்படுத்தும் முயற்சிகளில் முன்னேற்றம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் பின்னர் இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

காதுகேளாமை குறைபாடுள்ள குழந்தைகளில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மரபணுப் பிரச்சனைகளே காரணமாக இருக்கின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Science Translational Medicine என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மரபுரீதியான இந்தப் பிரச்சனையை வைரஸ்களின் மூலம் சரிசெய்து, சிலவகை காது கேளாமை பிரச்சினைகளை போக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்குள் இந்தப் பிரச்சனைக்கு சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்க இந்த ஆய்வின் முடிவுகள் இட்டுச்செல்லக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காது கேளாமை என்பது பல காரணிகளால் உருவாகிறது. அதில் ஒரு குறிப்பிட்ட வகை காது கேளாமையை மையப்படுத்தியே இந்த குறிப்பிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

காதுகளில் இருக்கும் நுண்ணிய ரோமங்களே சத்தங்களை மின் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன. பிறகு இந்த சமிக்ஞைகளை மூளை புரிந்துகொள்கிறது.

அமெரிக்கா மற்றும் சுவிஸர்லாந்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் இந்த ரோமங்களின் கவனம் செலுத்தி, ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆனால், மரபணுவில் உள்ள பிறழ்வுகளின் காரணமாக, இந்த ரோமங்களால் மின் சமிக்ஞையை உருவாக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், காது கேளாமை ஏற்படுகிறது. 

இந்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் குழுவினர் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வைரஸை உருவாக்கினர். அந்த வைரஸ் ரோமங்களின் செல்களில் தொற்றிக்கொண்டு, இந்தப் பிறழ்வை சரிசெய்தது.

முழுமையாக காது கேளாதிருந்த எலிகள் மீது முதல்கட்டமாக இந்த பரிசோதனை செய்யப்பட்டது. இந்த எலிகளின் காதில் ஊசி மூலம் வைரஸ் செலுத்தப்பட்டபோது, இயல்பான அளவுக்கு காது கேட்கும் திறன் வரவில்லையென்றாலும், ஓரளவுக்கு காது கேட்கும் திறன் ஏற்பட்டது.

அறுபது நாட்கள் அவற்றை ஆய்வுசெய்ததில், ஒலிகளுக்கு ஏற்ப அவற்றின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டது.

“இந்த ஆய்வு முடிவு உற்சாகமளித்திருக்கிறது. ஆனால், பொய்யானதொரு நம்பிக்கையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. காதுகேளாமைக்கு சிகிச்சையைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று இப்போதே கூற முடியாது” என இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் உருவரும் பாஸ்டன் சிறுவர் மருத்துவமனையைச் சேர்ந்தவருமான டாக்டர் ஜெப்ரி ஹோல்ட் தெரிவித்தார்.

“மரபணு காரணமாக ஏற்படும் காது கேளாமைக்கு சிகிச்சையளிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. எனவே இந்த ஆய்வு மிக முக்கியமானது” என்கிறார் அவர். 

ஆனால், மனிதர்களிடம் இந்த ஆய்வை நடத்த ஆய்வுக்குழுவினர் இன்னமும் தயாராகவில்லை.

வைரஸால் ஏற்படும் தாக்கம் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பது நீருபிக்கப்பட்டுவிட்டாலும், வாழ்நாள் முழுக்க நீடிக்க வேண்டிய தீர்வுதான் ஆய்வுக் குழுவின் இலக்காக இருக்கிறது.

வைரஸ் சிகிச்சையைப் பொறுத்தவரை, உள்காதில் இருக்கும் ரோமங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், வெளிக்காதில் இருக்கும் செல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.

இது மிக முக்கியமானது, ஏனென்றால், வெளிக்காதில் இருக்கும் ரோமங்கள் சத்தத்தின் தன்மையை மாற்றக்கூடியவை. அவைதான் மிக நுண்மையான சத்தத்தையும் கேட்க உதவுகின்றன.

டி.எம்.சி.1 என்றழைக்கப்படும் ஒரு மரபணுவின் பிறழ்வுதான் இப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. பாரம்பரியமாகக் கடத்தப்படும் 6 சதவீத காது கேளாமைப் பிரச்சனைகளுக்கு இந்த மரபணுப் பிறழ்வு காரணமாக இருக்கிறது.

டி.எம்.சி1 என்கிற மரபணுவைத்தவிர நூற்றுக்கும் அதிகமான வேறு மரபணுக்கள் இந்த காதுகேளாமை பிரச்சனையுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன.

மேலும், மிகச் சத்தமாக இசையைக் கேட்டதால் கேட்கும் திறனை இழந்த ஒருவருக்கு இந்த ஆய்வு பலன் தராது.