ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சபாநாயகரின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சபாநாயகரின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 
இருவருக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அப்பிரிவு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நேற்று இரவு சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்று இன்று வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதிக்கும் இந்நாள் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் இல்லத்தில் நேற்று மஹிந்தவுக்கு ஆதரவு வெளியிடும் 87 ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர் அவர்களுடன் பேச்சு நடத்திய மஹிந்த ராஜபக்ச தாம் ஒரு முக்கியமானவரை சந்தித்து விட்டு வருவதாக கூறி சென்று சுமார் 45 நிமிடங்களில் அங்கு திரும்பி வந்துள்ளார்.
இதன்பின்னர் ஆதரவாளர்கள் அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு 87 நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அழைத்து மஹிந்த கலந்துரையாடியுள்ளார்.
எனினும் இதன்போது பேசப்பட்ட விடயம் குறித்த தகவல் எவையும் வெளியாகவில்லை. இதற்கிடையிலேயே குறித்த 45 நிமிட பேச்சுவார்த்தை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன இருப்பினும் இந்த செய்தியை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது.