மஹிந்த பாதுகாப்புக்கு 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், 108 இராணுவத்தினர் ;ஹெலி வழங்கப்படவில்லை !

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், 108 இராணுவத்தினர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட, மஹிந்தவின் பயன்பாட்டுக்கு ஹெலிகொப்டர் ஒன்று வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ரொஹான் வெலிவிட்டவினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘முன்னாள் ஜனாதிபதியின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக ஹெலிகொப்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி அவர், கொழும்பிலிருந்து தங்காலைக்கு தனது உத்தியோகபூர்வ ஹெலிகொப்டரில் சென்றார். அதுவே அவர் இறுதியாக ஹெலிகொப்டரில் மேற்கொண்ட பயணமாகும். அன்று முதல் இன்று வரை இந்த அரசாங்கத்தினால் அவருக்கு அதற்கான வாய்ப்பினை வழங்கவில்லை. அதேபோன்று, தனக்கு ஹெலிகொப்டர் வசதி வேண்டும் என அவர் இதுவரையில் கேட்கவும் இல்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 105 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் அடங்குகின்றனர். அவர்களுக்கு பொலிஸ் திணைக்களத்தால் உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்று கிடைக்கப்பெற்றுள்ளன. இருப்பினும் அவர்களின் கடமைகளை மேற்கொள்வதற்காக காரியாலய வசதிகள் எவையும் வழங்கப்படவில்லை. குறைந்த வசதிகள் கொண்ட ஓரிடத்திலேயே அவர்களுக்கு தங்குமிட வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி மூன்று வாகனங்களைத் தவிர, அந்த 105 பேருக்கும் வேறு எந்த வாகனங்களோ அல்லது மோட்டார் சைக்கிள்கலோ வழங்கப்படவில்லை. ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த 17 வாகனங்களும் காரியாலய தொலைபேசிகளும் கூட பொலிஸ் திணைக்களத்தால் மீளப் பெறப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக கிடைக்கப்பெற்ற தனிப்பட்ட ரீதியிலான வாகனங்களையும் வாடகைக்கு பெறப்பட்ட வாகனங்களையுமே இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன், மஹிந்தரின் பாதுகாப்புக்காக 108 இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் உயர்நிலைப் பதிவி வகிக்கும் இருவரும் அடங்குகின்றனர். இருப்பினும், அவர்களுக்கு இராணுவத்திலிருந்து கிடைக்க வேண்டிய உத்தியோகபூர்வ வாகனங்களோ அல்லது காரியாலய வசதிகளோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அத்துடன், இந்த 108பேரின் போக்குவரத்துக்குக்கூட ஒரு வாகனம் கூட வழங்கப்படவில்லை. தங்குமிட வசதிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பயன்பாட்டுக்கென முக்கியஸ்தர்களுக்கான வாகனங்கள் மூன்றும் பாதுகாப்பு வாகங்கள் மூன்றும் மாத்திரமே ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளபடி, மஹிந்தரின் போக்குவரத்துக்காக எந்தவொரு ஹெலிகொப்டரும் வழங்கப்படவில்லை. அது வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை’ என்று வெலிவிட்ட தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.