பூமியைப் போன்று சந்திரனிலும் நில நடுக்கம் : ஆய்வு முடிவு !

dab94b0221bb6f45703aa145d080d810

பூமியைப் போன்று சந்திரனிலும் நில நடுக்கம் ஏற்படுவது, சந்திராயன் விண்கலம் அனுப்பியுள்ள படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் தெரியவந்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் ‘டெக்டானிக் பிளேட்’ என்று அழைக்கப்படக்கூடிய புவித்தட்டுகள் (புவி அடுக்குகள்) உள்ளன, அவை நகர்கிறபோது நில நடுக்கம் ஏற்படுகிறது.

பூமியின் துணை கிரகமான சந்திரனின் மேற்பரப்பிலும் புவி அடுக்குகள் போல அடுக்குகள் இருக்கின்றன என்றும் அந்த அடுக்குகள் நகர்கிறபோது, அங்கும் நில நடுக்கம் ஏற்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது.

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சந்திராயன் விண்கலம், எடுத்து அனுப்பியுள்ள படங்களை, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளியின் நிலவியல் தொலை உணர்வு பேராசிரியரும், விஞ்ஞானியுமான சவுமித்ரா முகர்ஜியும், அவரது மாணவி பிரியதர்சினி சிங்கும் ஆய்வு செய்து வந்தனர்.

குறிப்பாக சந்திராயன் விண்கலத்தில், பொருத்தப்பட்டுள்ள குறுகிய கோண கமராவும், சந்திர உளவு கல கமராவும் சந்திரனின் மேற்பரப்பினை படம் பிடித்து அனுப்பி உள்ளன. இந்த படத்தைத்தான் அவர்கள் ஆய்வு செய்து வந்தார்கள்.

சந்திரனின் தென்துருவத்தில் பெறப்பட்ட தகவல்கள், சந்திரனின் மேற்பரப்பில் அடுக்குகள் நகர்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. அதுவும் இந்த அடுக்குகளின் நகர்தல், பூமியில் புவித்தட்டுகளின் நகர்தல் போலவே அமைந்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் உள்ள அடுக்குகளில் இரண்டாவது அடுக்கு எரிந்துகொண்டிருப்பதால், டெக்டானிக் பிளேட்டுகள் நகர்கின்றன எனவும் இது தொடர்பில் ஆராய்ச்சி செய்த பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது அடுக்கு எரிந்து கொண்டிருப்பதால், அங்குள்ள பாறைகள், கனிமங்கள், தாதுக்கள் உருகி பாகு போன்ற திரவ நிலையில் உள்ளன.

இதேபோன்ற நிலையை சந்திரனின் மேற்பரப்பிலும் காண முடிகிறது.

எனவே, பூமியின் வடிவமைப்பில்தான் சந்திரனும் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டியதாகிறது. அந்த வகையில் பூமியில் ஏற்படுகிற நில நடுக்கத்தையும், சந்திரனில் ஏற்படுகிற நில நடுக்கத்தையும் ஒப்பிட்டு ஆராய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நில நடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க வழி இல்லை. எனவே எதிர்காலத்தில் சந்திரனின் மேற்பரப்பில் ஏற்படுகிற டெக்டானிக் பிளேட்டுகளின் நகர்தல், நில நடுக்கம் ஆகியவற்றை பூமியில் ஏற்படுகிற நில நடுக்கத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால், அது பூமியில் நில நடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதற்கு ஒரு முன்னோடியாக அமையும் என இந்த படங்களின் ஆராய்ச்சியின் பின் தெரியவந்துள்ளது.