முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனியான தனியார் பாதுகாப்பு பிரிவு !

images (3)முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனியான தனியார் பாதுகாப்பு பிரிவு ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அரசாங்கம் வழங்கி வரும் பாதுகாப்பு குறைந்து வருவதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை கவனத்தில் கொண்டு இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாராஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த யோசனையை முன்வைத்தனர் எனவும் அவர்கள் அதற்கான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கும் பாதுகாப்பை விட மேலதிகமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பிரதியமைச்சர் சாந்த பண்டார ஆகியோர் அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் ஆட்சியில் இருக்கும் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைத்ததுடன் இரண்டு காவற்துறையினரை மாத்திரமே அவரது பாதுகாப்புக்காக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் மகிந்த ராஜபக்சவுக்கு தற்போதைய அரசாங்கம் 100க்கும் மேற்பட்ட காவற்துறையினரின் பாதுகாப்பையும் வாகனங்களையும் வழங்கியுள்ளது.