இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குக் கணக்காளரை நியமிக்க வேண்டும் – சாணக்கியன் MP

இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குக் கணக்காளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (07.03.2023) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1993ஆம் ஆண்டு வர்த்தமானி ஊடாகப் பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதேச செயலகம்.

இதற்குக் கணக்காளர் இல்லை என்று சொல்வதோ அல்லது நியமிக்கப்படவில்லை என்று சொல்லுவதோ ஒரு அலட்சியமான பதில். இலங்கையில் பிரதேச செயலகம் ஒன்றுக்குக் கணக்காளர் தேவையில்லை என்று நீங்கள் எவ்வாறு கூறலாம். இது முற்று முழுதாக ஒரு தவறான விடயம்.