சளி, காய்ச்சலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க..!

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, வைட்டமின்கள், தாதுக்கள் குறைவாக இருப்பது, ரத்த சோகை, ரத்தத்தில் அதிகரித்து காணப்படும் ஈஸ்னோபில் செல்கள், ஒவ்வாமை, சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஏற்படும் வைரஸ் பாக்டீரியா தொற்றுகள் இவைகளால் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வருகிறது. இரண்டு நாட்களுக்கும் மேலாக தீவிர காய்ச்சல், அதீத இருமலுடன் வரும் குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று இருப்பதோடு, சில குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய தேவை இருப்பதோடு, சில நேரங்களில் அதீத அழுத்தம் கொண்ட ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.காய்ச்சல் இல்லாமல் சாதாரண இருமல் மட்டும் இருந்தால், இருமல் மருந்துக்கு பதிலாக, கை வைத்தியத்தை பின்பற்றலாம்.

வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மூலிகைகளை கொண்டே சளி, இருமலை குணப்படுத்தலாம். துளசி-5 இலைகள், கற்பூரவல்லி 2 இலைகள், ஆடாதோடை 2 இலைகள் எடுத்து சாறு பிழிந்து, அதில் தேன் கலந்து சூடுபடுத்தி காலை 5 மி.லி, இரவு 5 மி.லி வீதம் கொடுக்க வேண்டும். தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். முட்டையை ஆப் பாயில் செய்து அதனுடன் மிளகு கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.

பாலில், மிளகு, மஞ்சள், சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். நண்டு ரசம், நாட்டுக்கோழி ரசம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். குழந்தைகள் குடிக்கும் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்து கொடுக்கலாம். மஞ்சள் சளியை நீக்கும். 2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும். சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.