சிரியா நிலநடுக்கத்தில் மரணித்தவர் இறுதிச் சடங்கின் போது மீண்டும் உயிருடன் வந்தார்

சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் உயிரிழந்த ஒருவருடைய உடல் இரண்டு நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பின்னரும், அவர் திடீரென உயிர் பெற்றெழுந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தல் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கிடையே இருந்து அஹமது (Ahmed al-Maghribi) என்பவரின் உயிரற்ற உடல் மீட்கப்பட்ட நிலையில், அவரை முறைப்படி அவரது உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக, அவரது உடல் மருத்துவமனை ஒன்றில் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்துள்ளது.

இரண்டு நாட்களுக்குப் பின், அவரது உறவினர் ஒருவர் வந்து அவரை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து, இறந்த உடலை வைக்கும் பை ஒன்றில் வைத்து அஹமதுவின் உடல் அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அஹமதுவின் உடல் இறுதிச்சடங்குக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது திடீரென அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பை அசைந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பையைத் திறந்துபார்க்க, அஹமது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அஹமதுவிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.