சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் முதலமைச்சரினால் திறந்து வைப்பு!


தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு மிக பிரமாண்டமாக எழில்மிகு தோற்றத்துடன் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதி சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி 50 ஆயிரத்து 422 சதுரடி பரப்பளவில் நினைவிடம் அமைக்க முதல்கட்டமாக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை 2018-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பிறகு கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெற தொடங்கியது.

பீனிக்ஸ் பறவை வடிவமைப்புக் கொண்ட இந்த நினைவிடம் தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிட பணிகளுடன் எம்.ஜி.ஆர். நினைவிட புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த பணிகளும் சமீபத்தில் நிறைவடைந்தன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று நினைவிடத்தை திறந்து வைத்தார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் திறந்து வைத்தார். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். மெரினா கடற்கரை காமராஜர் சாலை முழுவதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தன. ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவையொட்டி மெரினா கடற்கரை விழாக்கோலம் பூண்டிருந்தது.