”அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” இராணுவத்தளபதி தெரிவித்தாக ஆசு மாரசிங்க எம்.பி தெரிவிப்பு

 

ஊடகப்பிரிவு

 

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொலைபேசியில் தன்னுடன் தொடர்புகொண்டு கைது செய்யபட்ட ஒருவர் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை மட்டுமே தன்னிடம் விடுத்தாகவும், அவர் தனக்கு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை எனவும் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க   தன்னிடம் கூறியதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். 

 

அமைச்சர் ரிஷாத் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே ஆசு மாரசிங்க இவ்வாறு கூறினார். இராணுவத்தளபதியுடன் தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்தவை பற்றி கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக ஆசு மாரசிங்க குறிப்பிட்டார். 

இதேவேளை, பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள அத்தனை குற்றச்சாட்டுக்களும் சுத்தப்பொய் எனவும் தன்னை பழி வாங்குவதற்காக இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமது அரசியல் தேவையை சில எம்.பிக்கள் அடைந்து கொள்வதற்கு முயற்சிப்பதற்காகவும் தெரிவித்தார். 

 

தனக்கு ஆலோசகராக மெளலவி எவறும் இல்லையெனவும், தனது தம்பி ஒருவர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டும் பொய்யானது எனவும் அத்துடன் இணைப்புச் செயலாளர் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொறுப்புடன் தாம் கூறுவதாகவும் சபையில் தெரிவித்தார்.

 

தனக்கு தெரிந்தவரும், முஸ்லிம் சமய விவகார அமைச்சில் ஆலோசகாராக பணிபுரிபவருமான ஒருவர், தனது மகனை முகமூடி அணிந்த சிலர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாகவும், அவர் பற்றிய தகவலை பெற்றுத்தருமாறு தன்னிடம் வேண்டினார். மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் துன்பப்பட்டிருக்கும் ஒருவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதே மனிதாபிமான செயலாகும். அந்த வகையில் பொலிஸ் பேச்சாளர் ருவான் குண்சேகரவுடன் தான் தொடர்புகொண்ட போது, பொலிஸார் அவ்வாறான ஒருவரை அழைத்துச் செல்லவில்லை என்று கூறி இராணுவத்தளபதியிடம் அறிந்துகொள்ளுமாறு தெரிவித்தார். அந்த வகையிலையே நான் இராணுவத்தளபதியுடன் தொடர்புகொண்டு அவர் பற்றி விசாரித்தேன், எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பதை இந்த சபையிலையே வலியுறுத்தி கூற விரும்புகின்றேன். இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.