வெடிபொருள் வைத்திருந்ததாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கைது !

53c76ba2-2748-4d0f-aba1-9ba21b73287a_S_secvpf

வெடிபொருள் வைத்திருந்ததாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் அன்ட்ரே பிளெட்சர் டொமினிக்கோவில் உள்ள டக்ளஸ் சார்லஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

27 வயதாகும் பிளெட்சர் விண்ட்வார்ட் தீவு அணியுடன் பயற்சி மேற்கொண்டு பின்னர் நாடு திரும்புவதற்காக டொமினிக்கோவில் உள்ள டக்ளஸ் சார்லஸ் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் வெடிபொருள் வைத்திருந்ததாக அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த தகவலை டொமினிக்கன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘‘பிளெட்சர் கைது செய்யப்பட்டதை அறிந்தோம். அவருக்கு நாங்கள் உதவி செய்வோம். அவரை விட்டுவிட மாட்டோம். இது என்னுடைய வேலை’’ என்று விண்ட்வார்ட் தீவு அணியின் மானேஜர் லாக்ஹார்ட் செபஸ்டியான் கூறியுள்ளார்.

கிரேனடாவில் பிறந்த பிளெட்சர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 15 ஒருநாள் போட்டி, 22 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2008-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களம் இறங்கிய இவர், கடைசியாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டர்பனில் கடந்த ஜனவரி மாதம் டி20 போட்டியில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.