யாழ். தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சம்பந்தன்

பாறுக் ஷிஹான்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(06)  பிற்பகல் யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது.
குறித்த பொதுக் கூட்டம் இன்று பிற்பகல்-05 மணியளவில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் சுமார்-01 மணித்தியாலம் காலதாமதமாகியே பொதுக் கூட்டத்திற்கு  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான  இரா. சம்பந்தன் வருகை தந்தார்.  இந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்குப் பலத்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகிய பொதுக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ஈஸ்வரபாதம் சரவணபவன், புளொட் அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்,ரெலோ அமைப்பின் பொதுச் செயலாளர் ந.ஸ்ரீகாந்தா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
இந்தப் பொதுக் கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான இ.ஜெயசேகரன், அ.பரஞ்சோதி, கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை முதன்மை வேட்பாளர் இ.ஆர்னோல்ட் மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்புச் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.