ACMC யில் இணைந்து கொண்ட அப்துல் ரஸாக் அவர்களை தொடர்பு கொள்ளவுள்ள SLMC

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் ரஸாக் (ஜவாத்) கட்சியில் வகிக்கும் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
 
 
குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவர், கட்சிக் கட்டுக்கோப்புகளை கடுமையாக மீறி நடப்பதனால் அவர் வகிக்கும் கட்சியின் பிரதிப் பொருளாளர் பதவியிலிருந்தும் அத்துடன் உச்சபீட உறுப்பினர் பதவியிலிருந்தும் ஜனவரி 03ஆம் திகதியிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் யாப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவரை இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் செயலாளர், குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
 
குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவருக்கு செயலாளர் அனுப்பிய கடிதத்தில், கல்முனை மாநகரசபையில் ஐ.தே.க. சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக வெளிப்படையாகவும், தீவிரமாகவும் பிரசாரத்தில் ஈடுபடுவதால் கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை கடுமையாக மீறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
அத்துடன், கட்சியின் உச்சபீடம் அவருக்கெதிராக மேற்கொள்ளவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து உரிய காலத்தில் அவருடன் தொடர்புகொள்ளும் என்றும் செயலாளர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆகையால், கட்சி உறுப்பினர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர் என்ற முறையிலோ பிரதி, பொருளாளர் என்ற முறையிலோ தம்மை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவருக்கு செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்