கொலை மிரட்டலுக்கு பயப்படப் போவதில்லை என தெரிவித்திருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகி ஹர்ஷிதா

அரியானா மாநிலத்தில் கச்சேரி முடிந்து வீடு திரும்பிய பாடகியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

டெல்லியில் உள்ள நரேலா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷிதா தஹியா (22). பாடகியான இவர் அரியானாவில் உள்ள கிராமத்தில் கச்சேரி ஒன்றில் பங்கேற்க நேற்று சென்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஹர்ஷிதா நேற்று மாலை டெல்லிக்கு தனது காரில் திரும்பி கொண்டிருந்தார். பானிபட் என்ற பகுதியில் உள்ள சமாரா நகர் அருகில் வரும்போது அவரது காரை மற்றொரு கார் வழிமறித்தது.

அதிலிருந்து இறங்கிய இரண்டு பேர் ஹர்ஷிதாவை காரில் இறங்கும்படி மிரட்டினர். அதன்பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அவரது முன் நெற்றி மற்றும் கழுத்தில் சரமாரியாக சுட்டு தள்ளினர். இந்த தாக்குதலில் ஹர்ஷிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் பேஸ்புக்கில் ஹர்ஷிதா ஒரு பாடலை பதிவிட்டிருந்தது தொடர்பாக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுபோன்ற கொலை மிரட்டலுக்கு பயப்படப் போவதில்லை என ஹர்ஷிதா தெரிவித்திருந்த நிலையில், அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.