வட கிழக்கு மாகாணத்திலுள்ள கிராமங்களுக்குள் பொலிஸார் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர்

 மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராக நாம்  நீதிமன்றின் தீர்ப்புக்கு மதிப்பளித்து அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.எனினும்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் சிலரினால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தமது அராஜக நடவடிக்கையினை கட்டவிழ்த்ததாக அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி நேற்று மாலை அம்பாந்தோட்டையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் கொள்கைத்திட்டத்திற்கு எதிராகவே எதிர்ப்பு ஆர்பாட்டம் நடாத்தினோம் . அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசாங்கம் சீனாவிற்கு விற்பனை செய்தது.எனவே இந்தியாவை சமாதானப்படுத்துவதற்காகவே மத்தள விமானநிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செவதற்கு நட வடிக்கை எடுத்துள்ளது. மேலும் அதன் மூலம் கிடைக்கும் நிதியைக்கொண்டு ரஷ்யாவிடம் இருந்து யுத்தக் கப்பல் கொள்வனவு செய்கின்றனர். நாட்டின் மீதுள்ள கடனை செலுத்துவதற்காக இவ்வாறு தேசிய சொத்துகளை விற்பனை செய்வதாகக் குறிப்பிடுகின்ற போதிலும் அவ்வாறு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு யுத்தக்கப்பல் கொள்வனவு செய்கின்றனர்.இதன் மூலம் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொலிஸார் தமது அராஜக செயற்பாட்டை அரங்கேற்றினர். மேலும் குறித்த வீதியினூடாக வைத்தியசாலைக்குச் சென்ற வயோதிபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை நாட்டின் சகல பாகங்களிலும் தற்போது பொலிஸார் தமது அராஜக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள கிராமங்களுக்குள் பொலிஸார் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர்.அதேபோல் வடக்கில் வீடுகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர். எனவே நாட்டில் பொலிஸ் ஆட் சியை முன்னெடுப்பதற்கே எதிர்பார்க்கின்றனர் என்றார்.