பெண்களின் நலன்களைப்பேண பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்: டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை

 

 

பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை  நடைமுறைப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணிக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். 

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தரும், உளவள ஆலோசகருமான இல்ஹாம்  மரிக்கார், கொலஜ் ஒப் எல்த் கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர் எம்.எச்.எம். முனாசிக் ஆகியோரும் பங்கேற்றனர். 

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெறுமனே வாய்ச்சவடால் அரசியல் நடத்துபவரல்லர். மக்களின் பிரச்சினையை இனங்கண்டு, இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி பணியாற்றி வருகின்றார். சமூகத்தின் குரலாக இருக்கின்றார். எனவேதான் அவரது கட்சியில் இணைந்து பெண்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வந்துள்ளேன். நான் ஏற்றுள்ள பணியை நேர்மையாகவும், செவ்வையாகவும் முன்னெடுப்பேனென்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. 

பெண்களுடன் நேரடியாக தொடர்புபட்ட பல்வேறு பிரச்சினைகளை என் அனுபவத்தின் வாயிலாக இனங்கண்டுள்ளேன். சமூதாயத்தில் பெண்கள் படுகின்ற அவஷ்தைகளும், துன்பங்களும் ஏராளம். குறிப்பாக குடும்பத் தலைவனின்றி, அந்த குடும்பங்களின் பொருளாதாரச் சுமைகளையும், ஏனைய பணிகளையும் மேற்கொண்டுவரும் பெண்களின் பரிதாபநிலையை போக்கவேண்டியது காலத்தின் கடமையாகும். 

நாங்கள் இது தொடர்பில் சில பிரச்சினைகளை இனங்கண்டுள்ளோம். கணவனை இழந்து விதவையாக வாழும் பெண்களுக்கு சுயதொழில் முயற்சிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும்,  ஊக்குவிப்பதும் அவற்றுக்கு வழிகாட்டலும் எமது பொறுப்பாக இருக்கின்றது.  அத்துடன் இயந்திர வாழ்க்கையாகிப்போன இந்தச் சமூதாயத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பல்வேறு மன அழுத்தங்களின் மத்தியிலே தொழில் புரிந்து வருகின்றனர்.  அவர்களுக்க உளவியல் கருத்தரங்குகளையும், செயலமர்வுகளையும் நடத்துவதற்கு நாங்கள் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். 

வறுமைக் கோட்டின் கீழே வாழ்கின்ற மாணவர்களுக்கும் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குகளை நடாத்துவதற்கும் எண்ணியுள்ளோம். அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும், சிறார்களுக்கும் உதவி அளிப்பதற்கான திட்டங்களும் எம்மிடம் உண்டு. இந்த முயற்சிகளுக்கு உதவுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் நாம் விடுத்த வேண்டுகோளை அவர்; ஏற்றுக்கொண்டு உதவ முன்வந்துள்ளார்.

பெண்களுக்கு உதவும் இந்தத்திட்டத்தை முன்னெடுக்கும் போது, பெண்கள் சார்ந்த கட்சியின் வலுவான கட்டமைப்பொன்று அத்தியாவசியமானது. எனவே, நாம் கட்சியின் சார்பாக எடுக்கும் இந்த சிறந்த முன்னெடுப்புகளுக்கு பெண்களாகிய நீங்கள் உதவவேண்டும். 

இணைப்பாளர், பெண்கள் விவகாரம் (அ.இ.ம.கா), இல. 12, ஜூம்ஆ மஸ்ஜித் வீதி, மினுவாங்கொட.  என்ற விலாசத்துடன் தொடர்பு கொண்டு எம்முடன் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள். இவ்வாறு தெரிவித்தார்.