வடகொரியாவின் திட்டத்திற்கு எதிராக அமெரிக்காவும் சீனாவும் இணைந்து வெற்றிகரமான தீர்வை எட்ட முடியும்: டிரம்ப் நம்பிக்கை

ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, அணு குண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை அழிக்கும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. 

கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை உருவாக்கி வரும் வடகொரியாவின் இந்த ஆயுத சோதனைகளுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக அமெரிக்க அரசு, வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. வடகொரியா ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார். ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மறைமுகமாக எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று சந்தித்து பேசினார். அப்போது, வடகொரியா மீது எதாவது செய்ய வேண்டும் என டிரம்ப் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியாவின் அணுசக்தி திட்டத்திற்கு முடிவு கட்டும் முயற்சியில், அமெரிக்காவும் சீனாவும் இணைந்து வெற்றிகரமான தீர்வை எட்ட முடியும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வடகொரியா விஷயத்தில் ஜி ஜின்பிங் நடவடிக்கையையும் டிரம்ப் பாராட்டினார்.